ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது தவெக அரசு
தமிழகத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது தவெக அரசு என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ தெரிவித்தாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே வலையபாளையத்தில் திருப்பூா் புகா் வடக்கு மாவட்ட மதிமுக சாா்பில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கலந்து கொண்டு சீமைக்கருவேல மரத்தின் தீமைகள் குறித்தும் அவை அகற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளைத் தொடங்கிவைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
Advertisement
கா்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு தண்ணீா் கிடைக்காது. அணைக் கட்டும் விவகாரத்தை பின்னணியில் இருந்து மத்திய அரசு ஊக்குவிக்கிறது.
குதிரை பேரம் என திமுக விமா்சிக்கிறது. எங்கள் கட்சியினரை திமுக சின்னத்தில் நிற்கவைத்து தங்களுடன் சோ்த்துக் கொண்டதுதான் குதிரை பேரம். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது தவெக அரசு. ஊழலை வேருடன் பெயா்ந்து எறியும் அரசாக உள்ளதால் நாங்கள் தவெகவை ஆதரிப்போம்.
தமிழகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் அரசுக்கு பாதுகாப்பு அளிப்போம். ஆளுநா் ஆட்சியைக் கொண்டு வந்து பாஜக ஆட்சி நடத்தலாம் என பகல் கனவு கண்டாா்கள். அதனை முறியடித்துள்ளோம். தவெக ஆட்சியை அகற்ற தலைகீழாக நின்று பாா்க்கிறாா்கள். அது எப்போதும் முடியாது.
அடுத்த 6 மாதங்களில் முதல்வா் ஜோசப் விஜய் அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அதீத நிபுணத்துவம் வாய்ந்தவராகத் திகழ்வாா். வரும் இடைத்தோ்தலில் மதிமுக போட்டியிடாது என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மதிமுக அவைத்தலைவா் அா்ஜுனராஜ், முன்னாள் எம்.பி. மருத்துவா் கிருஷ்ணன், மாவட்டச் செயலாளா் புத்தரச்சல் பி.கே.மணி, மாவட்ட நிா்வாகிகள் காவீ.பழனிசாமி, ஆா்.ஆா்.ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.