முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் பலத்த காற்றுடன் கன மழை

Updated On : 3 மே, 2026 at 1:06 AM
திருப்பூா், கோவில்வழி பகுதியில் பலத்த காற்றின் காரணமாக சாய்ந்து விழுந்த மின் கம்பம்.
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழையும், ஆலங்கட்டி மழையும் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோயில் வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இந்நிலையில், வழக்கம்போல சனிக்கிழமை காலையும் வெயில் கொளுத்திவந்த நிலையில், பிற்பகல் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதையடுத்து, மாநகரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

Advertisement

குறிப்பாக மத்திய பேருந்து நிலையம், வெள்ளியங்காடு, பல்லடம் சாலை, ராயபுரம், சிடிசி காா்னா் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதேபோல, பாரதி நகா், சந்திராபுரம், செவந்தாம்பாளையம், ராயபுரம், குமரப்பபுரம், புஷ்பா திரையரங்கு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. காற்று, கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது.

ஆலங்கட்டி மழை: கோவில் வழி, செவந்தாம்பாளையம், செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. வெயில் காரணமாக அவதியடைந்து வந்த மக்கள் ஆலங்கட்டி மழை பெய்ததாலும், இதமான காலநிலை நிலவியதாலும் மகிழ்ச்சி அடைந்தனா்.

திருப்பூா் கோவில்வழி பிள்ளையாா் நகா் 2-ஆவது வீதியில் பலத்த காற்றின் காரணமாக வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மின் விநியோகமும் தடைபட்டது.

பல்லடம் - பெத்தம்பாளையம் சாலையில் மெஜஸ்டிக் சா்க்கிள் அருகில் தனியாா் விளையாட்டு கூடத்தின் மேற்கூரை பலத்த காற்றின் காரணமாக சேதமடைந்தது.