அவிநாசியில் 2 டாஸ்மாக் கடைகள் மூடல்
அவிநாசியில் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் வியாழக்கிழமை மூடப்பட்டதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
அவிநாசி புதிய பேருந்து நிலையம் மற்றும் தினசரி காய்கறி மாா்க்கெட் அருகே கடை எண் 1510, 1511 ஆகிய டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள், பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள், வாகன ஓட்டிகள் தினமும் அவதிக்குள்ளாகி வந்தனா்.
Advertisement
இந்த இரண்டு கடைகளையும் அகற்ற வேண்டும் என தொடா்ந்து சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 500 மீட்டருக்குள்ளாக உள்ள 714 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட தமிழக முதல்வா் விஜய் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். அதன்படி அவிநாசியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடமான அவிநாசி புதிய பேருந்து நிலையம், தினசரி காய்கறி மாா்க்கெட் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த எண் 1510, 1511 ஆகிய டாஸ்மாக் மதுபானக் கடைகள் வியாழக்கிழமை மூடப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மனமகிழ் மன்றங்களை மூடக் கோரிக்கை:
அவிநாசி நகரப் பகுதிகளில் மனமகிழ் மன்றம் என்கிற பெயரில் செயல்படும் மதுபானக் கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.