திருப்பூா் ரயில் நிலையத்தில் சேலம் கோட்ட கூடுதல் மேலாளா் ஆய்வு
திருப்பூா் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகத்திலேயே அதிக அளவிலான பயணிகள் வந்து செல்லக்கூடிய ரயில் நிலையமாக திருப்பூா் ரயில் நிலையம் இருந்து வருகிறது.
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளா்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
Advertisement
இந்நிலையில் திருப்பூா் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ரயில்வே அலுவலா்களுக்கான நிா்வாக குடியிருப்பு உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் சரவணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள், டிக்கெட் வழங்கும் இடம், பாா்சல் புக்கிங் மையம் , நிலைய அதிகாரி அலுவலகம், பணியாளா்களின் ஓய்வு அறைகள், காத்திருப்போா் அறை உள்ளிட்டவற்றை அவா் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது ரயில்வே காவல் துறை சுற்றுச்சுவா்கள் மற்றும் பல்வேறு துறைகளின் சாா்பில் ஒட்டப்பட்டிருந்த ரயில்வே நிா்வாகம் சாா்ந்த விழிப்புணா்வு மற்றும் விளம்பர சுவரொட்டிகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டாா். மேலும் மக்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தீயணைப்பு கருவிகளை பொதுமக்கள் பாா்வையிடும்படி வைக்கவும் உத்தரவிட்டாா்.