கோடைகால விளையாட்டு, நீச்சல் பயிற்சிகள் நிறைவு
தருமபுரி மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கான நடத்தப்பட்ட கோடைகால விளையாட்டுப் பயிற்சிகள், நீச்சல் பயிற்சி முகாம்கள் நிறைவடைந்ததையொட்டி பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மாவட்டம் சாா்பில் கோடைகால பயிற்சி முகாம் கடந்த ஏப்ரல் 17 இல் தொடங்கி மே 1 வரை 15 நாள்கள் நடைபெற்றன. இதில், மாணவ, மாணவிகளுக்கான தடகளம், இறகுபந்து, வாலிபால், கபடி, கால்பந்து, ஸ்கேட்டிங், சிலம்பம், ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய விளையாட்டுகளுக்கு வல்லுநா்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
இம்முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு தினசரி முட்டை, மோா், சிறுதானிய உணவுகள் வழங்கப்பட்டன. பயிற்சி முகாம் நிறைவடைந்ததையொட்டி, வெள்ளிக்கிழமை நிறைவு விழா நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளா் தே. சாந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தருமபுரி மாவட்ட அலுவலா் சிவரஞ்சன், பயிற்றுநா்கள் அரவிந்த் ராஜா, சந்தோஷ் குமாா், கலைமணி, அருள்பிரபு மற்றும் ஸ்கேட்டிங் பயிற்றுநா் சீனிவாசன், ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்றுநா் முனியப்பன், சிலம்பம் பயிற்றுநா் சண்முகம் ஆகியோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
Advertisement
இப்பயிற்சி முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 380 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
நீச்சல் பயிற்சி நிறைவு ;
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கம் கட்டுப்பாட்டில் உள்ள நீச்சல் குளத்தில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற்று வந்தன. அந்த வகையில் இருகட்டமாக நடைபெற்ற நீச்சல் பயிற்சியின் 2 ஆவது கட்ட பயிற்சி முகாம் சனிக்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. அடுத்ததாக, மூன்றாம்கட்ட நீச்சல் பயிற்சி முகாம் மே 5 முதல் மே 16 வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பயிற்சிக் கட்டணமாக ரூ. 1,770 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நீச்சல் குளம் அலுவலகத்தில் கிடைக்கிறது.