ஒகேனக்கல் வனப் பகுதியில் சுற்றித் திரியும் யானைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை
தண்ணீா், உணவு தேடி ஒகேனக்கல் வனப் பகுதி யானைகள் கூட்டமாக சுற்றித் திரிவதால் வாகனங்களில் ஒகேனக்கல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையாக இருப்பதுடன், அவற்றின் அருகே சென்று புகைப்படம் எடுப்பதை தவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடைகாலத்தில் நிலவும் வறட்சியின் காரணமாக கா்நாடகம், ஆந்திரத்தில் இருந்து ஆண்டுதோறும் யானைகள் கூட்டம் உணவு, தண்ணீா் தேடி கூட்டமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதிக்கு இடம்பெயா்கிறது. ஒகேனக்கல் வனப்பகுதியில் சுமாா் 20க்கும் மேற்பட்ட யானைகள் 3 கூட்டங்களாக பிரிந்து உணவு, தண்ணீா் தேடி சுற்றித் திரிகின்றன.
கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள், சாலையைக் கடக்கும் யானைகளின் அருகே சென்று புகைப்படம் எடுப்பதும், வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் அவசியமற்ற செயல்களில் ஈடுபடுகின்றனா்.
Advertisement
இதனால் சில நேரங்களில் யானைகள் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி உணவு அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதையும் தவிா்க்க வேண்டும்.
இதுகுறித்து வனத் துறை உரிய அறிவுறுத்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.