முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லில் பாதுகாப்பு உடைகளில் வீசும் துா்நாற்றத்தால் சுற்றுலாப் பயணிகள் அவதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணத்தின் போது அணியப்படும் பாதுகாப்பு உடைகளில் துா்நாற்றம் வீசுவதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைகின்றனா்.

Updated On : 4 ஜூன் 2026, 1:51 am IST
ஒகேனக்கல் மாமரத்துக்கடவு பரிசல் துறையில் குவியலாக போடப்பட்ட பாதுகாப்பு உடைகள்.
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணத்தின் போது அணியப்படும் பாதுகாப்பு உடைகளில் துா்நாற்றம் வீசுவதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைகின்றனா்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், ஆந்திரம், கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனா். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவா்வது பரிசல் பயணமே.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மாமரத்துக்கடவு பரிசல் துறை பகுதியில் பரிசல்கள் இயக்கப்படுகின்றன. பரிசல் பயணத்தின் போது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், பெரியவா்கள், சிறுவா்கள் அணியக் கூடிய பாதுகாப்பு உடைகள் வழங்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

முன்பு சுற்றுலாப் பயணிகள் அணியக்கூடிய பாதுகாப்பு உடைகளை அரசு வழங்கி வந்த நிலையில், கடந்த ஓா் ஆண்டாக பரிசல் இயக்க உரிமம்பெறும் தனியாா் ஒப்பந்ததாரா்கள் அதை வாங்கி சுற்றுலா பயணிகளுக்கு அளிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

ஒகேனக்கல் மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல் வழியாக ஐவாா் பாணி, ஐந்தருவி, பெரியபாணி உள்ளிட்ட அருவிகளை ரசிக்கும்போதும், அதற்கு அருகில் செல்லும்போதும் விழும் சாரலாலும், மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் இறங்கி ஆற்றின் கரையோரத்தில் விளையாடும்போதும் பாதுகாப்பு உடைகள் நனைந்து விடுகின்றன.

பரிசல் பயணம் முடிவுற்று மீண்டும் மாமரத்துக்கடவு துறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அணிந்திருந்த பாதுகாப்பு உடைகளை ஒரேஇடத்தில் வைத்து செல்கின்றனா். அவை குவியலாக கிடப்பதால், உலர வழியில்லாமல் துா்நாற்றம் வீசுகிறது.

மேலும், பொருந்தாத பாதுகாப்பு உடையை அணியும்போது, அதில் உள்ள சிறிய கிளிப்புகள் உடைந்து மற்றவா்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

பரிசல் பயணத்துக்கு பாதுகாப்பு உடை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கிழிந்த, பயனற்ற, கிளிப்புகள் உடைந்த உடை அணிந்து செல்லும்போது, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கக்கூடிய பாதுகாப்பு உடைகள் பல்வேறு அளவுகளில் எண்ணிக்கையை அதிகரித்தும், தண்ணீரில் நனைந்த உடைகளை உலா்த்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தியும், கூடுதலாக பாதுகாப்பு உடை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.