தருமபுரியிலும் விளைகிறது கேரட்!
குளிர் பிரதேசங்களில் மட்டுமே விளையும் என்று அறியப்பட்ட கேரட், எல்லாக் காலங்களிலும் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியிலும் விளைவிக்கப்படுகிறது.
குளிர் பிரதேசங்களில் மட்டுமே விளையும் என்று அறியப்பட்ட கேரட், எல்லாக் காலங்களிலும் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியிலும் விளைவிக்கப்படுகிறது.
வைட்டமின் ஏ, சி ஆகிய உயிர்ச் சத்துகளும், பொட்டாசியம், மக்னீஷியம் ஆகியவையும் நிறைந்துள்ள பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகையைச் சேர்ந்த கேரட் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் திறனுள்ளவையாகும்.
ஊட்டி, கொடைக்கானல் போனால் கேரட்டுகளை கீரையுடன் பறித்து வைத்திருப்பதைக் காண முடியும். இந்த கேரட், வறட்சி மாவட்டம் என்று அறியப்படும் தருமபுரியில் சமதளப் பகுதியில் விளைவிக்கப்படுகிறது என்பது கொஞ்சம் ஆச்சரியம் ஊட்டும் தகவல்தான்.
பென்னாகரம் செல்லும் வழியில் சாலைக்குள்ளாத்திரம்பட்டியில்தான் ஏறத்தாழ 10 ஆண்டுகளாக கேரட் விளைவிக்கின்றனர் விவசாயத் தம்பதி சின்னசாமி-மாரியாத்தாள்!
குளிருள்ள பகுதியில் கேரட் விளையும் என்பது உண்மைதான். அதற்கேற்ப கழனியில் தண்ணீர் கட்டினால் (கேரட் விளைவிக்கும் வயலில் தண்ணீர் தேக்குதல்) நல்ல விளைச்சல் கிடைக்கும் என்கிறார் சின்னசாமி. அதாவது மற்ற பயிர்களுக்கு ஓர் ஏக்கருக்குத் தேவையான தண்ணீர் கேரட்டுக்கு கால் ஏக்கருக்குத் தேவைப்படும் என்று விவரிக்கிறார்.
ஒசூரிலிருந்து விதைகளை வாங்கி வந்து மணலில் கலந்து மண்ணில் தெளித்து விடுகிறோம். அதிக உரம் எதுவும் போடுவதில்லை. தேவைப்பட்டால் டிஏபி 5 கிலோ மட்டும் தெளிப்போம் அவ்வளவுதான். மூன்றரை மாதங்களில் விளைகிறது என்கிறார் சின்னசாமி. கார்த்திகை, மார்கழி, தை, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் மிகச் சிறப்பான விளைச்சல் கிடைக்கிறது. மற்ற மாதங்களில் விளைச்சல் குறைகிறது. விளைச்சல் குறையும் காலத்தில் ஏற்படும் நஷ்டத்தை, விளைச்சல் அதிகரிக்கும் காலங்களில் ஈடு செய்து கொள்கிறார்கள்.
இப்போதும் தலா 10 சென்ட் வீதம் 3 பாத்திகளில் கேரட் விவசாயம் களைகட்டுகிறது. ஒரு முறை கேரட் போட்டுவிட்டால், மற்ற பயிர்கள் போட முடியாது என்பதும் கிடையாதாம். பரிசோதனைக்காக வெவ்வேறு பயிர்களையும் பயிரிட்டு சாகுபடி செய்திருக்கிறார் சின்னசாமி.
வீடும், வயலும் ஒருங்கே அமைந்துள்ளன. பகலில் கேரட்டுகளை வீட்டு வாசலில் வைத்து விற்பனை செய்கிறார் மாரியாத்தாள். அதிக விளைச்சல் இருக்கும்போது தருமபுரி வந்து சந்தைக்குக் கொடுக்கிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.