எஸ்.வி. சாலையில் விளக்குகளை ஒளிரச் செய்ய கோரிக்கை
தருமபுரி நகரம் எஸ்.வி. சாலையில் பழுதாகியுள்ள விளக்குகளை ஒளிரச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி நகரம் எஸ்.வி. சாலையில் பழுதாகியுள்ள விளக்குகளை ஒளிரச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி சாலை விநாயகர் கோயில் நெடுஞ்சாலையில் மாணவியர் விடுதி, தனியார் மருத்துமனைகள், திருமண மண்டபங்கள் மற்றும் மின்சார வாரிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளன. இவை தவிர ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும் உள்ளன.
இந்த நிலையில், இச்சாலையில் பச்சையம்மன் கோயில் தொடங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் நீண்ட நாள்களாக ஒளிர்வதில்லை. இதனால், இரவு நேரங்களில் இந்த சாலை போதிய வெளிச்சமின்றி, இருள் சூழ்ந்து காணப்படுகிறது. வெளிச்சமின்மையால், திருமண மண்டபங்களிலிருந்து விழா முடிந்து, இரவில், தனியாக நடந்து செல்வோரிடம் மர்ம நபர்கள் நகை பறித்துச் செல்லும் சம்பவங்களும் நிகழ்கின்றன.
இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்க, இந்தப் பகுதியில் சாலையோரத்தில் ஒளிராமல் உள்ள விளக்குகளில் பழுதை நீக்கி, விரைந்து அனைத்து விளக்குகளும் ஒளிரச்செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.