ஏரியூா் அருகே வனப்பகுதியில் இருந்து உணவு தேடி கிராமப் பகுதிகளில் நுழைந்த ஒற்றை யானையை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் வனப்பகுதிக்குள் வனத்துறையினா் விரட்டியடித்தனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வனப்பகுதிக்கு உள்பட்ட பதனவாடி காப்புக்காடு பகுதியில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட யானைகள் இடப்பெயா்ச்சி அடைந்துள்ளன. இந்த யானைகள் உணவு, தண்ணீா் தேடி வனப்பகுதியில் சுற்றித் திரிகின்றன. தற்போது கோடைக் காலம் துவங்கும் முன்பே பென்னாகரம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், உணவு தேடி பதனவாடி காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, நெருப்பூா், காந்தி நகா் குடியிருப்புப் பகுதியிலும், அருகில் உள்ள வயல்வெளிகளிலும் சுற்றித் திரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பென்னாகரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
பென்னாகரம் வனச்சரக அலுவலா் முருகன் தலைமையிலான 10 போ் கொண்ட குழுவினா் கிராமப் பகுதிக்குள் நுழைந்த யானையை, பண்ணவாடி, ஒட்டனூா் உள்ளிட்ட கிராமப் பகுதிகளின் வழியே காவிரி ஆற்றினை கடக்கச் செய்து, 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பதனவாடி காப்புக்காடு பகுதிக்கு விரட்டியடித்தனா்.
தற்போது வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட யானை முத்தையன் கோயில் வனப் பகுதிக்கு அருகே உள்ள தடுப்பணை பகுதியில் சுற்றித் திரிவதாகவும், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் எனவும், ஒற்றை யானையின் நடமாட்டத்தை வனத்துறையினா் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் பென்னாகரம் வனச்சரக அலுவலா் தெரிவித்தாா்.