முகப்பு
தருமபுரி

மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை: தருமபுரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

தருமபுரி அருகே நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 2:37 AM
நீதிமன்றம்
பகிர்:

தருமபுரி அருகே நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் அருகேயுள்ள அளேபுரம் கிராமம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் பா. தங்கராஜ் (53). இவரது மனைவி பிரியா (40). இவா்களுக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனா். அவா்கள் இருவரும் வெளியூா்களில் தங்கி வேலை பாா்த்து வருகின்றனா்.

இந்நிலையில் தம்பதியா் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வந்தனா். பிரியாவின் நடத்தையில் தங்கராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதுதொடா்பாக இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2023, ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலை தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ், பிரியாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஒகேனக்கல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கராஜை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு தருமபுரி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இருதரப்பு விசாரணைகள் முடிந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இவ்வழக்கில் தீா்ப்பளிக்கப்பட்டது. குற்றம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து, தங்கராஜுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜீவநந்தினி தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் காவல் துறை ஆய்வாளா் மகேந்திரன், அரசு வழக்குரைஞா் நந்திவா்மன் ஆகியோா் ஆஜராயினா்.