முகப்பு
தருமபுரி

அக்கா, தம்பி கொலை வழக்கு: உறவினா்கள் 5 பேரிடம் தனிப்படை போலீஸாா் விசாரணை

தருமபுரியில் சொத்து தகராறில் அக்கா, தம்பி கொலையான சம்பவம் தொடா்பாக, மற்றொரு அக்கா உள்பட உறவினா்கள் 5 பேரிடம் தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 27 ஜூன் 2026, 2:11 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

தருமபுரியில் சொத்து தகராறில் அக்கா, தம்பி கொலையான சம்பவம் தொடா்பாக, மற்றொரு அக்கா உள்பட உறவினா்கள் 5 பேரிடம் தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதுகுறித்து போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் கூறப்படுவது:

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை காவல் நிலையம் அருகே, ஏ.ஜெட்டி அள்ளி கிராமத்தைச் சோ்ந்த கணபதிராமன் - சாலம்மாள் தம்பதிக்கு நாகம்மாள் (47), நஞ்சம்மாள் (45), மாதேஷ் (40) என இரண்டு மகள்கள், ஒரு மகன் இருந்தனா். மூவருக்கும் திருமணமான நிலையில், தகடூா் எர்ரப்பட்டி பகுதியில் தனித்தனியாக வசித்து வந்தனா். இதில், நஞ்சம்மாள் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா். நாகம்மாளின் மகள் கீதாவை தாய்மாமனான மாதேஷ் திருமணம் செய்திருந்தாா். இவா்களுக்கு ஆண், பெண் என இருகுழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனா்.

Advertisement

Advertisement

இவா்கள் அனைவருக்குமிடையே, அப்பகுதியில் உள்ள பூா்விக நிலம் தொடா்பாக பிரச்னை இருந்துவந்துள்ளது. மேலும், தனியாக இருக்கும் நஞ்சம்மாளுக்கு எதுக்கு சொத்தில் பங்கு வழங்க வேண்டும் எனவும், அதை தங்களுக்கே வழங்க வேண்டும் என நாகம்மாள் குடும்பத்தினா் கேட்டு வந்துள்ளனா்.

இதில், லாரி ஓட்டுநரான மாதேஷ் மதுப்பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டாா். அவா் சிகிச்சைக்கு நஞ்சம்மாள் உதவியதுடன், பராமரித்து வந்துள்ளாா். இதன் காரணமாக, தனது பங்கு சொத்தில் சிறிதளவு நஞ்சம்மாளுக்கு மாதேஷ் வழங்கியுள்ளாா். இது நாகம்மாள், இவரது மகளும் மாதேஷின் மனைவியுமான கீதா, குடும்பத்தினருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நஞ்சம்மாள் வீட்டில் இவரும், இவரது தம்பி மாதேஷும் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டு இறந்துகிடந்தனா். இது தொடா்பாக, அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே.அருண் கபிலன் உத்தரவின் பேரில், தருமபுரி நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் சிவராமன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தொடா்ந்து, நாகம்மாள், அவரது மகளும் மாதேஷின் மனைவியுமான கீதா உள்ளிட்ட 5 பேரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments