மாநில அளவிலான நீச்சல் போட்டி: நெல்லை அணிக்கு கோப்பை
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகள் சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டி பள்ளியின்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகள் சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டி பள்ளியின் வளாகத்தில் உள்ள நீச்சல் பயிற்சி குளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நெல்லை அணி முதலிடம் பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. முன்னதாக, போட்டியினை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாநில அளவிலான நீச்சல் போட்டியில் சென்னை, மதுரை, கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களிலுமிருந்து 41 ஆண்கள், 41 பெண்கள் குழுக்களிலிருந்து, 400 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தனி மற்றும் குழு போட்டிகளில் கலந்து கொண்டனர். இப் போட்டியில் திருநெல்வேலி பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி முதலிடத்தையும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றது. அதே பகுதியைச் சேர்ந்த கிங்ஸ் பள்ளி இரண்டாம் பரிசைப் பெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் பரிசுக் கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் அவர் பேசியதாவது: நீச்சல் என்பது அருமையான விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு தற்காப்பு கலையாகும். முறையாக நீச்சல் கலையைப் பயிற்றுவித்து அதை ஒரு சிறந்த விளையாட்டாகக் கருதி உங்களை ஊக்குவிக்கும் பெற்றோர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். மனமும், உடலும் ஒருங்கிணைந்து செயல்படும் போதுதான் சிறந்த நீச்சல் வீரர்களாக உருவாக முடியும். ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதோடு, ஆரோக்கியத்தைப் பேணவும், ஆயுள் கூடிடவும் இந்த நீச்சல் விளையாட்டு மிகச்சிறந்த உடற்பயிற்சியாக உள்ளது. இது ஒரு முழுமையான விளையாட்டு மட்டுமல்ல, இதனால் நம்முடைய போர்க்குணம், தாக்குப்பிடிக்கும் திறன், இதயத் துடிப்பு, தசைநார்கள் உறுதிப்படும் என்றார்.
இப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில், பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநர் சி.சதீஷ், பள்ளி துணை முதல்வர் ரோஹித், விளையாட்டு இயக்குநர் சந்திரபாபு, பயிற்சியாளர் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.