ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
ராசிபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
ராசிபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
ராசிபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற விழாவில், ஜெயலலிதா உருவப் படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதனையடுத்து பழைய பேருந்து நிலையத்திலும், பல்வேறு வார்டுகளிலும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து பிறந்த தினவிழாவை கொண்டாடினர். மேலும், ராசிபுரம் ஸ்ரீநித்ய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நாமக்கல் மக்களவைத் தொகுதி எம்.பி. பி.ஆர்.சுந்தரம், ராசிபுரம் நகர அதிமுக செயலாளரும், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவருமான எம்.பாலசுப்பிரமணியம், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் கே.பி.எஸ்.சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அ.ம.மு.க.சார்பில்... இதேபோல் ராசிபுரம் நகர அ.ம.மு.க. சார்பில் நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற விழாவில், ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து, பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை, சர்க்கரை பொங்கல், அன்னதானம் வழங்கினர். இதில் நகர அ.ம.மு.க. செயலர் வி.டி.தமிழ்ச்செல்வன் தலைமையில், அவைத் தலைவர் எஸ்.அன்பழகன், மாவட்டச் செயலர் பி.சம்பத்குமார், மாநில ஜெயலலிதா பேரவை இணைச்செயலர் ஏ.பி.பழனிவேல், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் வி.திருப்பதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வெண்ணந்தூர் ஒன்றிய அ.ம.மு.க. சார்பில் கட்டனாச்சம்பட்டி பகுதியில் நடைபெற்ற விழாவில், ஒன்றிய செயலர் கோபால் தலைமையில் கட்சி கொடியேற்று கல்வெட்டு திறக்கப்பட்டது. ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர். பின்னர், பொதுமக்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.
பரமத்திவேலூரில்.. பாண்டமங்கலம் அருகே உள்ள வெங்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 - ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71- ஆவது பிறந்த நாள் விழா பாண்டமங்கல் அருகே உள்ள வெங்கரை பழைய வெங்கரையம்மன் கோயில் அருகே நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜயக்குமார் அ.தி.மு.க கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வெங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். இதே போல் பரமத்தி வேலூரில் பரமத்தி வேலூர் நகரச் செயலாளர் வேலுச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.வினர் நான்கு சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து எம்.ஜி.ஆர். சிலைக்கும்,
உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொத்தனூர் நகரச் செயலாளர் நாராயணன் தலைமையில் பொத்தனூர் நான்கு சாலையில் இருந்து ஊர்வலாக புறப்பட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகே வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.