பாண்டமங்கலம் அருகே பாண்டீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
பரமத்தி வேலூர் வட்டம், பாண்டமங்கலம் அருகே உள்ள குச்சிப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள
பரமத்தி வேலூர் வட்டம், பாண்டமங்கலம் அருகே உள்ள குச்சிப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள பாண்டீஸ்வரர், பத்ராட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 22 - ஆம் தேதி காலை விநாயகர் வழிபாடு புண்யாகம், மகா கணபதி யாகம், மகாலட்சுமி யாகம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி, மாலையில் முளைப்பாரி அழைத்தல், வாஸ்து பூஜை, பூமி பூஜை, கும்ப அலங்காரம் மற்றும் முதற்கால யாக வேள்வி நடைபெற்றது. 23 ஆம் தேதி காலை விநாயகர் வழிபாடு விஷேச சாந்தி, யாக பூஜை, இரண்டாம் கால யாக வேள்வி, மாலையில் பூத சோதனம், பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை யாக பூஜை, இதையடுத்து மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம் மற்றும் கடம்புறப்பாடு, 8 மணிக்கு மேல் பகவதி அம்மன், கொங்கலம்மன் கோயில் கும்பாபிஷேகம், 8.30 மணிக்கு சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம், 9 மணிக்கு பாண்டீஸ்வரர், பத்ராட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வ கோயில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா அபிஷேகம், தசதானம், தச தரிசனம் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை குச்சிப்பாளையம் பாண்டீஸ்வரர் கோயில் ஆய்வாளர் மகாவிஷ்ணு, செயல் அலுவலர் கலைவாணி, கும்பாபிஷேக விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.