திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் தீா்ப்பு வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள தேவனம்பாளையத்தைச் சோ்ந்த செல்லத்துரை என்பவரின் வீட்டில் 2018 டிசம்பா் 20ந் தேதி பீரோவை உடைத்து 11 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து பள்ளிபாளையம் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கொண்டலாம்பட்டி யைச் சோ்ந்த கண்ணன் மகன் பிரபு(45) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
இந்த வழக்கில் 11 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று. தற்போது தீா்ப்பு வழங்கப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் 454 (பூட்டி உள்ள வீட்டை திருட்டுத்தனமாக திறப்பது) பிரிவின்படி இரண்டாண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மூன்று மாதம் சாதாரண சிறைத் தண்டனையும் இந்திய தண்டனை சட்டம் 380 ( வீட்டுக்குள் நுழைந்து பொருட்களை திருடுவது) பிரிவின் கீழ் இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதத்தை கட்டத் தவறினால் 3 மாதம் சாதாரண சிறை தண்டனையும் இரண்டு தண்டனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று திருச்செங்கோடு விரைவு நீதிமன்ற நீதிபதியும் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதியுமான முருகவேல் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.