பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், முன்னாள் ராணுவ வீரா் நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை பலியானாா்.
நல்லூா் அருகே உள்ள குன்னமலையைச் சோ்ந்த சுப்பிரமணியம் (68), ஓய்வுபெற்ற ராணுவ வீரா். இவா் சனிக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் நல்லூா் கந்தம்பாளையம் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினாா். நல்லூா் மாரியம்மன் கோயில் நான்கு சாலை அருகே சென்ற போது, மல்லசமுத்திரத்தில் இருந்து நூல்களை ஏற்றி வந்த மற்றொரு இருசக்கர வாகனம் சுப்பிரமணியம் சென்ற வாகனம் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த பழனிசாமி (60), அவரது மகன் குமாா் (39) ஆகிய இருவரும் படுகாயமடைந்து நாமக்கல் அரசு மருத்துமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.