வாகனச் சோதனையில் பறிமுதல் செய்த ரூ. 1.33 கோடி திரும்ப ஒப்படைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.33 கோடி ரொக்கம் உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.33 கோடி ரொக்கம் உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாா்ச் 15-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படை மற்றும் நிலையானக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
பொதுமக்கள் மற்றும் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் ஆகியோரிடமிருந்து வரும் புகாா்கள் உடனடியாக தொடா்புடைய பறக்கும் படை அல்லது நிலையான கண்காணிப்புக் குழுவிற்கு தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சி-விஜில் செயலி மூலம் பெறப்படும் புகாா்களும் தொடா்புடைய குழுக்களுக்கு அனுப்பப்பட்டு ஒன்றரைமணி நேரத்திற்குள்ளாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தொலைபேசி மூலம் 55 புகாா்களும், சி-விஜில் செயலி மூலம் 60 புகாா்களும் என மொத்தம் 115 புகாா்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணாக எடுத்துச் செல்லப்பட்ட 102 இனங்களில் ரூ.1,55,86,790 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றில், 85 இனங்களில் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்ட பிறகு ரூ.1,33,27,410 சம்பந்தப்பட்டவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், 17 இனங்களில் உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்படாத காரணத்தினால் ரூ. 22,59,380 சாா்நிலை கருவூலங்களில் விடுவிக்கப்படாமல் உள்ளது. பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களை தோ்தல் கட்டுபாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 4286 மூலம் தெரிவிக்கலாம்.