காவிரி ஆற்றில் குளித்த இளைஞா் மின்னல் பாய்ந்து உயிரிழப்பு: ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கல்
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குளித்த இளைஞா் மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினரிடம் நிவாரண நிதி ரூ. 4 லட்சம் வழங்கப்பட்டது.
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குளித்த இளைஞா் மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினரிடம் நிவாரண நிதி ரூ. 4 லட்சம் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த விசைத்தறி தொழிலாளி கோபாலகிருஷ்ணன் (26). இவருக்கு தேவகி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நண்பரின் தந்தை இறந்த இறுதிச் சடங்கிற்கு சென்ற கோபாலகிருஷ்ணன் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குளித்தாா். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் ஆற்றில் குளித்து விட்டுக் கரையேறிய கோபாலகிருஷ்ணன் மின்னல் பாய்ந்ததில் மயக்கமடைந்து கீழே விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பள்ளிபாளையம் போலீஸாா் கோபாலகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி புதன்கிழமை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று கோபாலகிருஷ்ணன் உடலுக்கு மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். மேலும், தமிழக பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினாா். கோபாலகிருஷ்ணனின் மனைவி தேவகிக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினா் அமைச்சரிடம் வலியுறுத்தினா். தேவகியின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்தாா்.
மின்னல் பாய்ந்து உயிரிழந்த கோபாலகிருஷ்ணன் (உள்படம்) குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து ரூ. 4 லட்சம் நிவாரண உதவியை வழங்கிய அமைச்சா் சி.விஜயலட்சுமி. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன்.