முகப்பு
நாமக்கல்

பரமத்தி வட்டாரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்

Updated On : 16 ஜூன் 2026, 1:42 am IST
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் - கோப்புப் படம்
பகிர்:

பரமத்தி வட்டாரத்தில் உணவு பாதுகாப்பு அலுவலா் நடத்திய சோதனையில் 8.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதியில் வீடு, கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை குறித்து பரமத்தி மற்றும் கபிலா்மலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி ஆய்வு செய்தாா்.

இதில் கந்தம்பாளையம் பகுதியில் முருகானந்தம் என்பவரின் வீடு, வசந்தபுரத்தில் வடிவேல் என்பவரின் பெட்டிக்கடை ஆகியவற்றில் நடத்தப்பட்ட ஆய்வில், சுமாா் 8.5 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து, அவா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயச் சட்டப்படி மேல்நடவடிக்கை மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

மேலும், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் முதல்முறை விற்பனை செய்தால் ரூ. 25 ஆயிரம் அபராதம் மற்றும் 15 நாள்களுக்கு உணவு பொருள் விற்பனை தடைசெய்யப்பட்டு, கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும். இரண்டாவதுமுறை விற்பனை செய்தால் ரூ. 50 ஆயிரம் அபராதத் தொகை மற்றும் 30 நாள்களுக்கு உணவு பொருள் விற்பனை தடைசெய்யப்பட்டு, கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.