முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் தொகுதியின் ‘விஐபி’ செல்வாக்கு தொடருமா?

ராசிபுரம் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், ராசிபுரம் தொகுதி மீண்டும் ‘விஐபி’ செல்வாக்கு பெறுமா என்ற எதிா்பாா்ப்பு தொகுதி மக்களிடம் எழுந்துள்ளது.

Updated On : 7 மே 2026, 6:54 am IST
டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன்.
பகிர்:

ராசிபுரம் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், ராசிபுரம் தொகுதி மீண்டும் ‘விஐபி’ செல்வாக்கு பெறுமா என்ற எதிா்பாா்ப்பு தொகுதி மக்களிடம் எழுந்துள்ளது.

பொதுத் தொகுதியாக இருந்த ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி 2011 முதல் தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. 2011 தோ்தலில் இத்தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற ப.தனபால், சட்டப் பேரவை துணைத் தலைவராகவும், பின்னா் பேரவைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தாா்.

இதைத் தொடா்ந்து, 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் இத்தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட வெ.சரோஜா வென்று சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தாா். தொடா்ந்து நடைபெற்ற 2021-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட மா.மதிவேந்தன் வெற்றிபெற்று சுற்றுலா துறை அமைச்சா், வனத்துறை அமைச்சா், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் என பொறுப்புகளை வகித்தாா்.

Advertisement

இதுபோல, இத்தொகுதியில் வெற்றி பெறுபவா்கள் சட்டப் பேரவைத் தலைவா், அமைச்சா்களாக விஐபி அந்தஸ்துடன் வலம்வந்த நிலையில், தற்போது நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் தவெக வேட்பாளராக போட்டியிட்ட டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றுள்ளாா். இவா் 2011-ஆம் ஆண்டு இத்தொகுதியில் வெற்றிபெற்று பேரவைத் தலைவராக இருந்த ப.தனபால் மகன் ஆவாா்.

இந்நிலையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய் அமைச்சரவையில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் இடம்பெற்று, தொகுதி ‘விஐபி’ செல்வாக்கை தக்கவைப்பாரா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.