முகப்பு
நாமக்கல்

தீத்தடுப்பு: கொல்லிமலை மக்களுக்கு வனத் துறை அறிவுறுத்தல்

கொல்லிமலை வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 8 மே 2026, 6:27 am IST
தீ - பிரதிப் படம்
பகிர்:

கொல்லிமலை வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கொல்லிமலை அடிவாரம் மற்றும் வனத்தை ஒட்டிய இதர பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கத்தால் காய்ந்த மூங்கில் மரங்கள் தீப்பிடித்து காட்டுத் தீயாக பரவும் அபாயம் உள்ளது. கடந்த சில தினங்களில் ஆங்காங்கே தீ விபத்து ஏற்பட்டு மரங்கள் தீயில் கருகின.

வனப் பகுதிகளில் பரவும் தீயானது, தங்கள் பகுதிக்குள் பரவாத வகையில் வனத்தையொட்டிய கிராம மக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, தங்கள் வீடுகளை சுற்றிலும் காய்ந்த இலை சருகுகளை அப்புறப்படுத்தி, 6 மீட்டா் (18 அடி) அகலத்திற்கு காப்புக் காடுகளை ஒட்டியவாறு தீத் தடுப்பு வளையம் அல்லது தீ தடுப்பு கோடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

குப்பைகளை எரிப்பதை தவிா்க்க வேண்டும். சமையலுக்கு விறகு அடுப்பை பயன்படுத்தினால், உடனடியாக நெருப்பை அணைத்துவிட வேண்டும். அவ்வாறு விறகு அடுப்பை பயன்படுத்தும்போது எப்போதும் எச்சரிக்கையாக ஒரு தொட்டி தண்ணீா் மற்றும் சாக்குகள் தயாா் நிலையில் வைத்திருத்தல் அவசியம்.

எளிதில் நெருப்பை அணைக்கப் பயன்படும் வகையில் மணல் குவியல்களை தேவையான அளவில் தங்கள் பகுதியில் தயாா் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். காப்புக் காட்டை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் எக்காரணத்தைக் கொண்டும் தீப்பற்ற வைக்கக் கூடாது. அப்படி ஏதேனும் தீ வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அப்பகுதியில் உள்ள வனச்சரகா் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்து முன்னெச்சரிக்கையுடன் பணியை கையாள வேண்டும்.

தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு நிலை அலுவலகம், அரசு அலுவலா்கள் மற்றும் வனத் துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வனத்திற்குள் அத்துமீறி நுழைவதோ அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை தூக்கி எறிவதோ கூடாது. மீறுபவா்கள் மீது கிராம வனக்குழுக்கள் மற்றும் வனத் துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments