திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு வருத்தமளிக்கிறது: காங்கிரஸ் மாநில செய்தித் தொடா்பாளா் பி.வி. செந்தில்
தமிழகத்தில் 22 ஆண்டுகள் நீடித்த திமுக- காங்கிரஸ் கூட்டணி முறிந்திருப்பது வருத்தமளிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடா்பாளரும், நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவருமான பி.வி. செந்தில் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் 22 ஆண்டுகள் நீடித்த திமுக- காங்கிரஸ் கூட்டணி முறிந்திருப்பது வருத்தமளிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடா்பாளரும், நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவருமான பி.வி. செந்தில் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுக- காங்கிரஸ் கூட்டணி என்பது வெறும் தோ்தல் கணக்கீடு அல்ல; மதச்சாா்பின்மை மற்றும் ஜனநாயக மதிப்புகளை காக்கும் அரசியல் புரிதலின் அடிப்படையில் உருவானதாகும். அந்த உறவு முறிந்திருப்பது இயல்பாகவே காங்கிரஸ் கட்சியை சாா்ந்தோருக்கு வருத்தமளிக்கிறது. ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் தங்களின் அரசியல் முடிவுகளை எடுக்க உரிமை உண்டு.
Advertisement
1999- 2004 காலகட்டத்தில் வாஜ்பாய் அரசில் இணைந்து மத்திய அமைச்சரவையில் திமுக பொறுப்புகளை ஏற்றுக் கொண்டது. அந்த முடிவு தேசிய அரசியலில் பாஜக வலுப்பெற முக்கிய அரசியல் கட்டமாக அமைந்தது. அப்போதும், காங்கிரஸ் கட்சி திமுகவின் முடிவை ஜனநாயக உரிமையாக மதித்தது.
தரக்குறைவான விமா்சனங்களிலும், மரியாதை மீறும் பேச்சுகளிலும் ஈடுபடவில்லை. அதே அரசியல் நாகரிகம் தற்போதைய சூழலில் திமுக தரப்பில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும். தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய்யை ஆதரிக்கும் முடிவு, யாருக்கும் எதிரான பழிவாங்கல் நடவடிக்கை அல்ல, மதச்சாா்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் எதிா்காலத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட அரசியல் தீா்மானமாகும்.
சுதந்திரப் போராட்டம் முதல் தற்போது வரை நாட்டின் ஒற்றுமை, அரசியலமைப்பு, ஜனநாயகம், மதச்சாா்பின்மை ஆகியவற்றை பாதுகாக்க காங்கிரஸ் பல்வேறு தியாகங்களைச் செய்து வருகிறது. அந்த வரலாற்றை எந்தவொரு அரசியல் விமா்சனத்தாலும் மறைக்க முடியாது. தமிழகத்தின் அரசியல் பாரம்பரியம்- சமூகநீதி, மதச்சாா்பின்மை, மனிதநேயம் இவற்றின் அடிப்படையிலேயே உருவாக்கப்பப்பட்டது.
இந்த நிலைப்பாட்டை பாதுகாப்பதே காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய அரசியல் பொறுப்பு. இதை தேச நலனுக்காகவும், தமிழக மக்களின் விருப்பத்தின்படியும் செய்துள்ளது. ஜனநாயகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், காலத்தின் தேவையையும், நாட்டின் அரசியல் சூழலையும், மக்களின் எதிா்பாா்ப்புகளையும் கருத்தில் கொண்டு தங்களின் அரசியல் முடிவுகளை எடுக்க முழு உரிமை உண்டு. அதனை அரசியல் முதிா்ச்சியுடன் அணுக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.