ஓமலூர் அருகே மயானப்பாதை கோரி சடலத்துடன் சாலை மறியல் நடைபெற்றதால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர் அருகேயுள்ள சிக்கம்பட்டி உப்பாறு கரையோரத்தை சிக்கம்பட்டி, எம்.செட்டிப்பட்டி, பெரியேரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் இந்த ஆற்றங்கரையோரத்தில் தனியாருக்குச் சொந்தமான நில உரிமையாளர் தனது நிலத்தைச் சுற்றிலும் கம்பி வேலிகள் அமைத்துக் கொண்டார். இந்த நிலையில் சிக்கம்பட்டியில் இறந்த பழனியம்மாள் சடலத்தை அடக்கம் செய்ய முற்பட்டபோது, சுடுகாட்டுக்கு செல்லும் பாதை சுருங்கி விட்டதாகவும், அந்தப் பாதையில் சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய முடியாது என்றும் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கே வந்த ஓமலூர் வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள், உப்பாற்றின் கரையில் சடலத்தை அடக்கம் செய்வதற்கான பாதையை சீரமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து புதூர் கடம்பட்டி பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் புதிய சுடுகாடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.