ஏற்காடு படகு ஏரியில் தொடர்ந்து கழிவுநீர் கலப்பதால் ஆகாயத்தாமரை படர்ந்து ஏரியை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலாப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் முக்கியப் பொழுதுபோக்கு படகு சவாரி ஆகும். இந்நிலையில், ஏற்காடு சுற்றுலாத் தலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
இதனால், ஏற்காடு நகர் பகுதி, லாங்கில் பேட்டை, ஜெரினாகாடு, முருகன் நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் சிதிலமடைந்துள்ளதால், கழிவு நீர் ஏரியில் கலக்கிறது.
இதனால், ஏரி நீரின் தன்மை மாறி அதிகளவில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் பொதுமக்களின் வரிப்பணத்தில் ஏரியை தூர்வார ரூ.2 கோடி செலவு செய்தும் முறையான திட்டம் தீட்டப்படாததால், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.