மேட்டூர் அருகே பெண் கொலை வழக்கில் மூவரை போலீஸார் கைது செய்தனர்.
கொளத்தூர் அருகே காளையனூரைச் சேர்ந்தவர் குருநாதன் மகள் பழனியம்மாள் (38). திருமணமாகி கடந்த 20 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை இவரது சடலம் மேட்டூர் நீர் தேக்கப் பகுதியில் நிர்வாண நிலையில் மிதந்தது. போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அவரது வயிற்றுப் பகுதி கத்தியால் அறுக்கப்பட்டு வயிற்றில் கற்களை வைத்துக் கட்டி காவிரியில் வீசியது தெரியவந்தது.
போலீஸார் விசாரணையில் காளையனூரைச் சேர்ந்த மாரியப்பன், மேட்டூப்பளையூர் மாது என்கிற மாதப்பன், சுப்பு என்கிற சுப்பிரமணி (39) ஆகியோர் கல்லால் தாக்கிக் கொலை செய்து பின்னர் கத்தியால் வயிற்றை அறுத்துக் கற்களை வைத்து காவிரியில் வீசியது தெரியவந்தது.
சில வாரங்களுக்கு முன் பழனியம்மாள் வீட்டருகே உள்ள வைக்கோல் போரில் தீப்பற்றிக் கொண்டது. மாரியப்பன் என்பவருக்குச் சொந்தமான அந்த வைகோல் போருக்கு பழனியம்மாள்தான் தீவைத்தாக கூறி பழனியம்மாள் வீட்டின் மீது கற்களால் தாக்கி உள்ளனர். ஆவேசமடைந்த பழனியம்மாள் மாரியப்பன் வீட்டிற்கே சென்று அவரை தாக்கி வந்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த மாரியப்பனும், மற்ற இருவரும் சேர்ந்த பழனியம்மாளைக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் மூவரையும் திங்கள்கிழமை கொளத்தூர் போலீஸார் கைது செய்தனர்.