சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம் துவக்கி வைப்பு
சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரத்தின்
சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரத்தின் செயல்பாட்டை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் செவ்வாய்க்கிழமை துவக்கி வைத்தார்.
தமிழக அரசின் உத்தரவின்படி ஜனவரி 1-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்வதாக அறிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தமிழகத்திலேயே முதன்முறையாக எம்.ஜி.ஆர். மத்திய பேருந்து நிலையத்தில், நடைமேடை எண் 2-ல் பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியுதவின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஏ.வி.ஆர். நிர்வாகத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்துக்குள் 250 மில்லி முதல் 2.25 லிட்டர் வரையிலான காலியான பிளாஸ்டிக் பாட்டிலை போடும்போது, அவை மறுசுழற்சிக்கு ஏற்றவாறு அரைக்கப்பட்டு இயந்திரத்தில் சேகரமாகும்.
மேலும், காலியான பிளாஸ்டிக் பாட்டிலை போட்டவுடன், இயந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பட்டன்களை அழுத்தி 5 வகையான சலுகைகளை இலவசமாக பெற முடியும்.
அதன்படி 5 நிமிடம் இலவசமாக கைபேசியை வேகமாக சார்ஜ் செய்யும் வசதி, மற்றும் 250 மில்லி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறும் வசதி, தானம் செய்யும் வசதி மற்றும் கூப்பன் பெறும் வசதி, போன்ற வசதிகள் உள்ளன.
எனவே, பேருந்து நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் காலியான குடிநீர் பாட்டில்களை தூக்கி எறியாமல் இந்த இயந்திரத்தில் போட்டு பல்வேறு வசதிகளை பெறலாம். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக சேலம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஆணையர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் மருத்துவர் கே.பார்த்திபன், ஏ.வி.ஆர். நிறுவனத்தின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.