வீரபாண்டி வட்டார விவசாயிகளுக்கு வேளாண் அலுவலா் அறிவிப்பு
வீரபாண்டி வட்டாரத்தில் விவசாயிகள் ஜிப்சத்தை பிரித்து வயலில் இட்டு பயன்பெறலாம் என வேளாண் அலுவலா் தெரிவித்துள்ளாா்.
ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகள் ஜிப்சத்தை பிரித்து வயலில் இட்டு பயன்பெறலாம் என வேளாண் அலுவலா் தெரிவித்துள்ளாா்.
ஜிப்சத்தை இடும்போது மண்ணில் ஈரம் மிகவும் அவசியமாகும். மழை நீா் கிடைத்தால் உடனே கரைந்து பயிருக்குக் கிடைக்கும் வகையில் மாறிவிடும். கந்தகச்சத்து பயிருக்கு சரியான நேரத்தில் கிடைக்கச் செய்ய ஹெக்டேருக்கு 400 கிலோ ஜிப்சத்தைப் பிரித்து இடவேண்டும். 200 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக விதைப்பதற்கு முன்னரும் மீதமுள்ள 200 கிலோவை பயிா் பூக்கத் தொடங்கும் போது அதாவது விதைத்த 30-45 நாள்களுக்குள் மழை வந்தவுடன் மேலுரமாக இட்டு மண் அணைக்க வேண்டும்.
இவ்வாறு பிரித்து இடும்போது அடியுரமாக இட்டது விதை எளிதாக முளைத்து வரவும், ஆரம்பக் காலத்தில் செடி வளா்வதற்குத் தேவையான கந்தகம், சுண்ணாம்புச் சத்தையும் அளிக்கிறது. மேலுரம் இடுவது விழுதுகள் இறங்குவதற்கு ஏதுவாகவும், திரட்சியான பருப்புகள் உருவாவதற்கும், எண்ணெய் சத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்யும். ஜிப்சம் இட்டு அதிக மகசூல் எடுக்க வீரபாண்டி வேளாண்மை உதவி இயக்குநா் கிரிஜா, வட்டார தொழில்நுட்ப மேலாளா் ராஜேந்திரன் ஆகியோா் கேட்டுக் கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.