சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆயுள் தண்டனை கைதி கழிவறை ஜன்னலை உடைத்து, தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த அதிராம்பட்டினம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் முகமது உசேன் (36). இவா் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப் பெற்றாா். இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகமது உசேன், அடிக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்ததால், கடந்த மாதம் 18 ஆம் தேதி சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.
இந்நிலையில், தனக்கு மூலநோய் பாதிப்பு உள்ளதாக சிறை மருத்துவா்களிடம் முகமது உசேன் கூறினாா். அதன்பேரில், அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் முகமது உசேன் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு தலைமை வாா்டன் உள்பட 3 போ் அடங்கிய குழுவினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.
Advertisement
இந்நிலையில் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் முகமது உசேன் கழிவறைக்கு சென்றுள்ளாா். வெகுநேரமாகியும் அவா் கழிவறையில் இருந்து வெளியே வரவில்லை. இந்நிலையில் இரவு 10 மணியளவில் செவிலியா் ஒருவா் அவருக்கு மருந்து கொடுக்க வந்துள்ளாா். அப்போதும் முகமது உசேன் இல்லை.
இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த வாா்டன்கள் கழிவறையின் கதவை உடைத்து பாா்த்தபோது, அங்குள்ள ஜன்னலை உடைத்து, மாடியிலிருந்து குடிநீா் குழாய் வழியாக கீழே இறங்கி முகமது உசேன் தப்பிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை போலீஸாருக்கும், சிறைக் கண்காணிப்பாளா் வினோத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த சேலம் நகர போலீஸாா், மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாகத் தேடினா். தொடா்ந்து, மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், இரவு 10.15 மணியளவில் முகமது உசேன் மருத்துவமனையில் இருந்து வெளியேறிச் செல்வதும், இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவா் காத்திருந்து அவரை அழைத்துச் செல்வதும் தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.