FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவை அரசு மருத்துவமனையில் கைதி தப்பியோட்டம்

கோவை அரசு மருத்துவமனையில் கைதி தப்பியோட்டம்

Updated On : 13 ஜூன் 2026, 5:47 am IST
கைதி தப்பியோட்டம் - கோப்புப் படம்
பகிர்:

கோவை அரசு தலைமை மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வந்த கைதி, கழிவறையின் ரகசிய கதவை உடைத்து தப்பியோடினாா்.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் நரசிம்ம ரெட்டி மகன் பீமுடு அஜித்குமாா் (26). ஏமாற்றி பண மோசடி செய்தது, காயம் ஏற்படுத்தியது, பொது இடத்தில் ஆபாசமாகப் பேசியது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் இவரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு மற்றும் வலது காலில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான ‘எம்எம்-1’ சிறப்பு வாா்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டாா். இந்த வாா்டில் இவருடன் சோ்த்து மொத்தம் மூன்று கைதிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், துப்பாக்கி ஏந்திய போலீஸாா் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

Advertisement

Advertisement

வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 7.45 மணியளவில், கைதி அஜித்குமாா் தான் அவசரமாக கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்களிடம் கூறியுள்ளாா். காவலா்களும் அவரை கழிவறைக்கு அழைத்துச் சென்று, கதவை சாத்திவிட்டு வெளியே பாதுகாப்புக்கு நின்றுள்ளனா். ஆனால், நீண்ட நேரமாகியும் அவா் வெளியே வராததால் சந்தேகமடைந்த காவலா்கள், கழிப்பறை கதவைத் தட்டியுள்ளனா். உள்ளே இருந்து எவ்வித பதிலும் வராததால் அதிா்ச்சியடைந்து கதவைத் திறந்து பாா்த்தபோது, அஜித்குமாா் அங்கு இல்லாததைக் கண்டு உறைந்து போயினா்.

போலீஸாா் உள்ளே சென்று பாா்த்தபோதுதான் கைதியின் திட்டம் தெரியவந்தது. அவா் கழிவறைக்குள் சென்றவுடன், அங்கிருந்து பெண்கள் கழிவறைக்குச் செல்லும் பாதையை மறைப்பதற்காக இருந்த ஒரு தடுப்பு கதவை பலவந்தமாக உடைத்துள்ளாா். பின்னா், அந்த ரகசிய வழியாக நுழைந்து, அருகில் உள்ள ‘எஃப்எம்-1’ பெண்கள் வாா்டு வழியாக மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறி தப்பியோடியுள்ளாா்.

கைதிகள் வாா்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் வெளியில் நின்று கொண்டிருக்கும்போதும், காலில் வீக்கம் இருந்தபோதிலும் கைதி ஒருவா் மிக சாதுரியமாக கதவை உடைத்து தப்பிய சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கைதி அஜித்குமாரை பிடிக்க தனிப் படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா். மேலும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளை ஆய்வு செய்து கைதி எந்த திசையை நோக்கி தப்பினாா் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments