முகப்பு
மதுரை

மதுரை அரசு மருத்துவமனையில் தரகர்களை பிடிப்பதில் போலீஸார் ஒத்துழைப்பில்லை

சேவை எனும் பெயரில் மதுரை அரசு மருத்துவமனையில் நடமாடும் தரகர்களைப் பிடிக்க கோரிக்கை விடுத்தபோதிலும், போலீஸ் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் ரா.அண்ணாதுரையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 12 மே 2013, 5:57 am IST
பகிர்:

சேவை எனும் பெயரில் மதுரை அரசு மருத்துவமனையில் நடமாடும் தரகர்களைப் பிடிக்க கோரிக்கை விடுத்தபோதிலும், போலீஸ் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் ரா.அண்ணாதுரையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

    மதுரை அரசு மருத்துவமனை மேம்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு டீன் டாக்டர் என்.மோகன் தலைமை வகித்தார்.  தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் (மார்க்சிஸ்ட்) ரா.அண்ணாதுரை மற்றும் மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் திருவாய்மொழிப்பெருமாள்,  துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் செüந்திரராஜன், பொதுப்பணித் துறை பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

   மருத்துவமனையில் உள்ள 113 வது வார்டை மேம்படுத்த பணிகளை தொடங்கவுள்ளதால், வார்டு நோயாளிகளை வேறு இடத்துக்கு மாற்றவும், சாலைகளை மேம்படுத்தவும், தீயணைப்பு சாதனங்கள் ரூ.19 லட்சத்தில் பொருத்துவது, தள்ளுவண்டிகள் பழுதானால் சீராக்கிட ரூ.3 லட்சத்தில் புதிய பிரிவு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

   சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாதுரை பேசுகையில், ஏழைகள் சிகிச்சை பெறும் மருத்துவமனை நோயாளிகள் நலன் கருதி 113-வது வார்டு மேம்பாட்டுப் பணியை 20 நாள்களுக்குள் விரைந்து முடிக்க கேட்டுக் கொண்டார்.

  அப்போது, பிரேதப் பரிசோதனை அறையில் அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை இருந்தும், தனியார் ஆம்புலன்ஸ்களில் சடலங்கள் தொடர்ந்து ஏற்றப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டது. அப்போது, டீன் டாக்டர் மோகன் பேசுகையில்,  பிரேதப் பரிசோதனை அறை முன் இலவச சேவை என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் கட்டணம் வசூலித்து சடலங்களை ஏற்றுகிறார். சேவையாளர் என விளம்பரம் செய்யும் அவர் குறித்து புகார் அளித்தும் போலீஸார் கண்டுகொள்வதில்லை. போலீஸாருக்கு அந் நபரின் உதவி தேவைப்படுகிறது என்கிறார்கள். அரசே இலவச அமரர் ஊர்தி சேவையைச் செயல்படுத்தும்போது  தொண்டு நிறுவன சேவை என்பது தேவையில்லாதது. இதை போலீஸாரும், ஊடகங்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

 உடனே இதுகுறித்து போலீஸ் ஆணையரிடம் புகார் அளிக்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினர் ரா. அண்ணாதுரை உறுதியளித்தார். மேலும், மருத்துவமனை முன் உள்ள சாலையில் பிளாட்பாரத்தில் உள்ள கடைகளை அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனுக் கொடுத்தும் பயனில்லை என்றும் கூறப்பட்டது. இதுதொடர்பாகவும், மாநகராட்சி ஆணையரிடம் பேசுவதாக சட்டப்பேரவை உறுப்பினர் கூறினார்.

   மேலும், செய்தியாளர்களிடம் டீன் மோகன் கூறியதாவது: அரசு மருத்துவமனைக்கு ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அறிவுரைப்படி, நோயாளிகளைக் கொண்டு செல்லும் ஸ்ட்ரெச்சர்கள் 110, படுக்கைகள் 100, வீல்சேர் 60, குப்பை அள்ளும் வண்டிகள் 70 உள்ளிட்டவை சுமார் ரூ.20 லட்சத்தில் வாங்கப்படவுள்ளன. சட்டப்பேரவை உறுப்பினர் ரா.அண்ணாதுரை தொகுதி நிதி ரூ.35 லட்சம் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.