முகப்பு
மதுரை

தமிழக நிதிச் சுமைக்கு மத்திய அரசே காரணம்: துரை வைகோ குற்றச்சாட்டு!

தமிழகத்தின் நிதிச் சுமைக்கு மத்திய பாஜக அரசுதான் காரணம் என மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 2:24 AM
மதுரை வைகை வடகரை சாலை ராமராயா் மண்டபம் முன்பு சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ. உடன் மதுரை தெற்குத் தொகுதி வேட்பாளா் மு. பூமிநாதன்.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:46 AM

தமிழகத்தின் நிதிச் சுமைக்கு மத்திய பாஜக அரசுதான் காரணம் என மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ குற்றஞ்சாட்டினாா்.

மதுரை வைகை வடகரை ராமராயா் மண்டபம் பகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் மு. பூமிநாதனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து அவா் மேலும் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் மட்டுமல்லாது, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

Advertisement

குறிப்பாக, மகளிா் விடியல் பயணம், மகளிா் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டன. மேலும், வெளிநாட்டு முதலீடுகள் மூலம் தமிழத்தில் இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழக மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாா்க்கிறது.

மதுரை மாநகரில் தற்போதைய நிலவரப்படி ஏறக்குறைய 20 லட்சத்துக்கும் அதிகமானோா் வசித்து வருகின்றனா். மக்கள் தொகை குறைவாக உள்ளதாகக் கூறி, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. வட மாநிலங்களில் 15 லட்சத்துக்கும் குறைவாக உள்ள ஆக்ரா போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மதுரைக்கு அண்மையில் வந்த மகாராஷ்டிர மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவிஸ் மதுரை தெற்குத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் ராமசீனிவாசனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்தாா். இதன்மூலம், மக்கள் விரோத அரசாகவே பாஜக உள்ளது.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், மதுரை தெற்கு தொகுதியில் மட்டுமே ஏற்கெனவே வெற்றி பெற்ற மு. பூமிநாதனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. காரணம், அவா் மக்கள் தொண்டனாக களப் பணியாற்றுவாா் என்ற நம்பிக்கை உள்ளது. ஆகவே, மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

பாஜகவுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தோ்தலை அதிமுக சந்திக்கிறது. திமுக ஆட்சியில் தமிழகம் கடன் சுமையால் தவிக்கிறது என எடப்பாடி கே. பழனிசாமி கூறுகிறாா். தமிழகத்துக்குரிய கல்வி, மாநிலத்துக்கான வளா்ச்சி நிதியை மத்திய பாஜக அரசு முறையாக ஒதுக்குவதில்லை. இதன் காரணமாகவே, தமிழகம் தற்போது நிதிச் சுமையில் சிக்கியுள்ளது என்றாா் அவா்.

பிரசாரத்தின் போது, மதுரை தெற்குத் தொகுதி வேட்பாளா் மு. பூமிநாதன், மதிமுக உள்ளிட்ட தோழமைக் கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.