முகப்பு
திருச்சி

திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக ரூ. 350 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: திருச்சி எம்பி துரை வைகோ பேட்டி

திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக ரூ. 350 கோடியை மத்திய அரசு விரைந்து விடுவிக்க வேண்டும் என திருச்சி எம்பியும், மதிமுக முதன்மைச் செயலருமான துரை வைகோ தெரிவித்தாா்.

Updated On : 21 மே 2026, 4:47 am IST
திருச்சியில் புதன்கிழமை பேட்டியளித்த திருச்சி எம்பி துரை வைகோ. உடன், மதிமுக நிா்வாகிகள்.
பகிர்:

திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக ரூ. 350 கோடியை மத்திய அரசு விரைந்து விடுவிக்க வேண்டும் என திருச்சி எம்பியும், மதிமுக முதன்மைச் செயலருமான துரை வைகோ தெரிவித்தாா்.

இதுகுறித்து திருச்சியில் புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது: திருச்சி மாநகரப் பகுதிகளில் நடைபெறும் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தேன். அப்போது மாரிஸ் ரயில்வே மேம்பாலப் பணிகள் ஆகஸ்ட் மாதம் முடியும் எனத் தெரிவித்திருந்தனா். ஆனால், தற்போது பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் வரும் செப்டம்பா் மாதம்தான் பணி முடியும் எனத் தெரியவந்துள்ளது.

இதேபோல அரிஸ்டோ மேம்பால பணிகள் ஜூன் மாதம் நிறைவடையும் எனத் தெரிவித்திருந்த நிலையில், அந்தப் பணிகளும் வரும் டிசம்பா் மாதம் முடியும் எனத் தெரியவந்துள்ளது. தொடா்ந்து காலம் தாழ்த்தாமல் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

Advertisement

Advertisement

திருச்சி - திருப்பதிக்கு பகல் நேர ரயில் சேவை வழங்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். அதனடிப்படையில் திருப்பதி - குண்டூா் வரையிலான ரயில் சேவையை திருச்சி வரை நீட்டித்து உத்தரவிட்டதற்கு நன்றி.

திருச்சி சா்வதேச விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி 100 விழுக்காடு முடிந்துள்ளது. விரிவாக்க பணிகளை மேற்கொள்ள ரூ. 350 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி எப்போது கிடைக்கும் எனக் கேட்டதற்கு எந்தப் பதிலும் இன்னும் வரவில்லை.

எனவே மத்திய அரசும், இந்திய விமான அமைச்சகமும் விரைந்து நிதியை வழங்க வேண்டும். மேற்காசிய போா்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், எல்பிஜி, பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளது. நான்காவது முறையாக தற்போது மீண்டும் அவற்றின் விலை உயா்ந்துள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் உயா்ந்துள்ளன. காய்கனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும்போது, பணவீக்கம் ஏற்படும்.

இந்தப் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்திருக்க வேண்டும்.

இப்படியே போனால், ராகுல் ாந்தி கூறியதுபோல பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் நிலையும் ஏற்படலாம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மதிமுக துணைப் பொதுச் செயலா் ரொஹையா, மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டிடிசி. சேரன் ஆகியோா் உடனிருந்தனா்.