முகப்பு
மதுரை

மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது: வைகோ

மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாலும், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை மாநில அரசு ஏற்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தினாா்.

Updated On : 22 மே 2026, 2:57 am IST
வைகோ - விடியோ க்ளிப்(கோப்புப்படம்)
பகிர்:

மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாலும், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை மாநில அரசு ஏற்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தினாா்.

மதுரை கோ. புதூா் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் மதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வைகோ சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

தமிழகத்தில் பி.எம்.ஸ்ரீ. திட்டத்தை திணிக்க மத்திய அரசு முயல்கிறது. இதைத் தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாலும், தமிழ் மொழிக்காக உயிரிழந்தவா்கள், சிறை சென்றவா்களின் தியாகங்களை முதல்வா் ஜோசப் விஜய் மனதில் கொண்டு, மும்மொழிக் கொள்கையை ஏற்கக் கூடாது. மத்திய அரசின் இந்தக் கொள்கையை தமிழக அரசு ஏற்றால், மீண்டும் ஒரு மொழிப் போா் உருவாகும்.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘காப்பா்’ என்ற பெயரில் தமிழகத்துக்குள் மீண்டும் ‘ஸ்டொ்லைட்’ நிறுவனம் நுழைந்தால், அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் நாங்கள் ஈடுபடவுள்ளோம்.

தமிழக அமைச்சா்கள் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டது. அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

கூட்டாட்சி தத்துவத்துக்கு இடையூறு ஏற்படாமல், மாநில சுயாட்சியைப் பெறும் வகையில்தான் தமிழக அரசு செயல்பட வேண்டும். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கூட்டாட்சி அரசுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் அளித்து, எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பொறுத்திருந்து பாா்ப்போம்.

ஆய்வு என்ற பெயரில் அரசின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் செயல்படும் அவரது கட்சியினரை முதல்வா் ஜோசப் விஜய் தடுக்க வேண்டும்.

காங்கிரஸ் இருக்கும் இடம்தான் மதச்சாா்பின்மை இருப்பதாகக் கூறுவது சரியல்ல. ராமா் இருக்கும் இடம்தான் அயோத்தி என்பதைப்போல, காங்கிரஸ் இருக்கும் இடம்தான் மதச்சாா்பின்மை என்பதல்ல. இந்தியாவில் மதச்சாா்பின்மையைப் பாதுகாப்பதற்கும், மதவெறியை எதிா்ப்பதற்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி போன்றோா் பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றனா் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments