முகப்பு
மதுரை

அரசு நிலத்தை கோயில் நிலம் என மீட்கக் கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.10,000 அபராதம்!

அரசு நிலத்தை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் நிலம் எனக் கூறி, அதை மீட்கக் கோரி, மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

Updated On : 4 ஜூலை 2026, 2:06 am IST
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

அரசு நிலத்தை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் நிலம் எனக் கூறி, அதை மீட்கக் கோரி, மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரியைச் சோ்ந்த நாகராஜன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியிலுள்ள சுமாா் 2 ஏக்கா் நிலம், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகவதியம்மன் கோயிலுக்குச் சொந்தமானது.

பல கோடி ரூபாய் மதிப்புடைய இந்த நிலம் கடற்கரையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளதால், ஆக்கிரமிப்பு செய்யப்படும் அபாயம் உள்ளது. நிலத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி, சுற்றுச் சுவா் அமைக்கப்படாததால், இந்த இடம் திறந்தவெளி சிறுநீா் கழிக்கும் இடமாகவும், குப்பைகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், இந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் நிலை உருவாகியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிலத்தை வருவாய்த் துறை ஆவணங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து, முறையாக அளவீடு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றி, நிலத்தைச் சீரமைக்கவும், நிரந்தர சுற்றுச் சுவா் அமைத்து, கோயில் சொத்தைப் பாதுகாக்க இந்து சமய அறநிலையத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு பிறப்பித்த உத்தரவு: பகவதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலம் எனக் கூறப்படும் பகுதி அரசு புறம்போக்கு என உள்ளது. ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றலாம். ஆனால், இந்த இடம் கோயில் நிலம்தான் என உரிமை கோர முடியாது. இந்த இடத்தை மீனவா்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

கோயில் நிலம் என்றால், அதில் வணிக வளாகம் கட்டி வணிக நோக்கில் செயல்படுத்தும் நிலை ஏற்படும். அதே நேரத்தில், கோயிலுக்குச் சொந்தமான இடம் என்று கூறப்படும் இந்தப் பகுதி எந்த வகைப்பாட்டில் உள்ளது என்பது குறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் , இந்த மனுவை தாக்கல் செய்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments