முகப்பு
மதுரை

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அளவிடுவதற்கு 144 தடை உத்தரவை பயன்படுத்தலாம்: உயா்நீதிமன்றம்

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அளவிடும் பணியின்போது 144 தடை உத்தரவை காவல் துறை பயன்படுத்தலாம் என உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பரிந்துரை

Updated On : 8 ஜூலை 2026, 1:13 am IST
144 தடை
பகிர்:

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அளவிடும் பணியின்போது 144 தடை உத்தரவை காவல் துறை பயன்படுத்தலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பரிந்துரைத்தது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சோ்ந்த முருகேசன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கல்லாலங்குடி கிராமத்தில் உள்ள சமுத்திரக்குளத்தை சிலா் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனா். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள், ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா். இந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்பை அகற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, சம்பந்தப்பட்ட பகுதியில் நீா்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், அதிகாரிகளால் நிலத்தை ஆய்வு செய்யவும், குறிப்பாணை வழங்கவும் இயலாத நிலை உள்ளதாக அரசுத் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: யாா் வேண்டுமானாலும் நீா்நிலைகளை ஆக்கிரமித்துவிட்டுத் தப்பிக்கலாம் என நினைக்கக் கூடாது. நிலத்தை அளவீடு செய்வதற்கும், ஆக்கிரமிப்பாளா்களுக்கு குறிப்பாணை வழங்குவதற்கும் தேவையான பாதுகாப்பை புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வழங்க வேண்டும்.

தேவையெனில், ஆய்வு நடைபெறும் காலத்தில் 144 தடையுத்தரவை காவல் துறை பிறப்பிக்கலாம். மேலும், மனுதாரரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments