முகப்பு
திண்டுக்கல்

நத்தம் அருகே குடிநீர் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்

நத்தம் அருகே குடிநீர் கோரி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:13 am IST
பகிர்:

நத்தம் அருகே குடிநீர் கோரி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
        திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள ஆவிச்சிபட்டி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆவிச்சிபட்டி ஊராட்சி சார்பில், கல்லணையாறு, பூலாங்குளம் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, 2 மேல்நிலைத் தொட்டிகள் மூலமாக  குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், மோட்டார் பழுதானதாலும், குழாய்கள் சீரமைக்கப்படாததாலும், கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் பாதிப்படைந்துள்ளது.
     இது தொடர்பாக ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனிடையே, கடந்த 1 வார காலமாக குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த ஆவிச்சிப்பட்டி கிராமத்தினர், காலி குடங்களை சாலைகளில் வைத்து செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர். 
     இது குறித்து தகவலறிந்த நத்தம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் பேசி, குடிநீர் பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக காலை 7.30 முதல் 8.30 மணி வரை அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.