ரூ.1 லட்சம் செலவில் வாய்க்காலை தூர்வாரிய விவசாயிகள்
பழனியை அடுத்த அ.கலையமுத்தூர் வாய்க்காலை விவசாயிகளே சொந்த செலவில் ஞாயிற்றுக்கிழமை தூர் வாரினர்.
பழனியை அடுத்த அ.கலையமுத்தூர் வாய்க்காலை விவசாயிகளே சொந்த செலவில் ஞாயிற்றுக்கிழமை தூர் வாரினர்.
பழனி அருகே அ. கலையமுத்தூர் கிராமத்தில் உள்ளது ராஜ வாய்க்கால். சுமார் 900 ஏக்கர் விவசாய நிலங்கள் இதன்மூலம் பயன்பெறுகிறது. இவற்றில் தற்போது விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் பாலாறு அணையில் இருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டுவரும் ராஜவாய்க்காலில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்படாமல் செடிகள் முளைத்த நிலையில் உள்ளது. பழனி பொதுப்பணித்துறையில் உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட பல பணியிடங்களும் காலியாக இருப்பதால் தூர்வாரும் பணிகள் சுணக்கமடைந்துள்ளன. இதையடுத்து ராஜவாய்க்காலை தூர் வாரி தண்ணீர் தடையில்லாமல் செல்லும் வகையில் விவசாயிகள் தாங்களாகவே ஒன்றிணைந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் தற்போது வாய்க்கால் தூர் வாரப் பட்டால் மட்டுமே இந்த ஆண்டு விவசாயம் செய்ய முடியும் என்பதால் தாங்களே பொக்லைன் இயந்திரங்களை வைத்து இப்பணிகளை செய்வதாக தெரிவித்தனர்.