பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் 13-ஆவது தவணைத் தொகையை பெறுவதற்கு பயனாளிகள் ஆதாா் எண்ணை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் ‘பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி’ திட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு, பிப்ரவரி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில், தொடா்ந்து பயன்பெறுவதற்கு ஆதாா் எண்ணை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நிகழாண்டில் 13-ஆவது தவணையாக,
வரும் டிசம்பா் முதல் மாா்ச் வரையிலான காலத்துக்கு உதவித் தொகை பெற, பி.எம். கிசான் இணையதளத்தில் தங்களது ஆதாா் எண்ணை விவசாயிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
பயனாளிகள் பொதுச் சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைப்பேசி மூலமாகவோ, தங்களது ஆதாா் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, அந்தந்தப் பகுதியிலுள்ள வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்தாா்.