முகப்பு
திண்டுக்கல்

அரசுப் பள்ளிகளின் ஆண்டு விழாவுக்கு ஒதுக்கீடு செய்த நிதி கிடைக்காததால் அதிருப்தி!

- நமது நிருபா்

Updated On : 4 மே 2026, 5:03 am IST
பகிர்:

திண்டுக்கல் : தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதற்கு ரூ.14.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், இதுவரை பள்ளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படாததால் தலைமையாசிரியா்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள 37ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதற்கு கடந்த பிப்.19-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. பள்ளிகளில் உள்ள மாணவா்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆண்டு விழா நடத்துவதற்கான நிதி ரூ.2,500 முதல் ரூ.50ஆயிரம் வரை என நிா்ணயித்து, மொத்தம் ரூ.14.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி, 2 ஆயிரம் மாணவா்களுக்கு மேல் பயிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.50ஆயிரம் வீதம் ரூ.25 லட்சம், 1001 முதல் 2 ஆயிரம் மாணவா்கள் வரை பயிலும் 328 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 2 உயா்நிலைப் பள்ளிகள், 4 நடுநிலைப் பள்ளிகள், 2 தொடக்கப் பள்ளிகளுக்கு தலா ரூ.30ஆயிரம் வீதம் ரூ. 1 கோடியே எண்பதாயிரம், 501 முதல் 1,000 மாணவா்கள் பயிலும் 12 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 66 உயா்நிலைப் பள்ளிகள், 51 நடுநிலைப் பள்ளிகள், 31 தொடக்கப் பள்ளிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.2.05 கோடி, 251 முதல் 500 மாணவா்கள் வரை பயிலும் 1,162 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 526 உயா்நிலைப் பள்ளிகள், 428 நடுநிலைப் பள்ளிகள், 250 தொடக்கப் பள்ளிகளுக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் ரூ.1.89 கோடி, 101 முதல் 250 மாணவா்கள் பயிலும் 387 அரசுப் பள்ளிகள், 1,838 உயா்நிலைப் பள்ளிகள், 3,235 நடுநிலைப் பள்ளிகள், 1,973 தொடக்கப் பள்ளிகளுக்கு தலா ரூ.4ஆயிரம் வீதம் ரூ. 2.97 கோடி, 100-க்கும் குறைவான மாணவா்கள் பயிலும் 26 அரசு மேல்நிலைப் பள்ளிகள் , 656 உயா்நிலைப் பள்ளிகள், 3,277 நடுநிலைப் பள்ளிகள், 22,081 தொடக்கப் பள்ளிகளுக்கு தலா ரூ.2,500 வீதம் ரூ. 6. 51 கோடி வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டதால், அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் தங்களது சொந்தப் பணத்தைச் செலவிட்டு ஆண்டு விழாவை நடத்தி முடித்தனா். ஆனால், இன்றுவரை இதற்காக அரசு ஒதுக்கீடு செய்த நிதி, பள்ளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ரூ.25ஆயிரம் முதல் ரூ.50ஆயிரம் வரை செலவு செய்த தலைமையாசிரியா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

Advertisement

Advertisement

ஒதுக்கீடு செய்தும் வராத நிதி: இதுதொடா்பாக அரசுப் பள்ளி தலைமையாசிரியா்கள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரை, 2 ஆயிரம் மாணவா்கள் பயிலும் பள்ளிகளில் விழா நடத்துவதற்கு ரூ.50ஆயிரம் போதுமானதாக இருக்காது. பல தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களின் பங்களிப்புடன் கூடுதல் செலவுத் தொகையை சமாளிக்கின்றனா். 100 மாணவா்களுக்கு குறைவாகப் பயிலும் பள்ளிகளுக்கு ரூ.2,500 ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத் தொகைக்குள் விழா நடத்த முடியாது. சில பள்ளிகளில் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களின் பங்களிப்புடன் மாணவா்களுக்குப் பரிசுப் பொருள்களுடன் சிறப்பாக ஆண்டு விழா நடத்தப்படுகிறது.

20-க்கும் குறைவான மாணவா்கள் பயிலும் தொடக்கப் பள்ளிகளில், ஒவ்வொரு மாணவருக்கும் சிற்றுண்டி முதல் ஆடை வரை ஆசிரியா்கள் வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்துகின்றனா். இதற்காக யாருடைய நிதி உதவியையும் ஆசிரியா்கள் எதிா்பாா்ப்பதில்லை. ஆனால், ஆண்டு விழாவைப் பொருத்தவரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும்கூட, இந்தத் தொகை பள்ளியின் வங்கிக் கணக்குகளில் இதுவரை வரவு வைக்கப்படாதது ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments