பழனி சண்முகநதி அருகே மலை போல குப்பைகள் தேக்கம்! பொதுமக்கள் அவதி!
பழனி சண்முகநதி அருகே நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் மலை போல தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்...
பழனி சண்முகநதி அருகே நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் மலை போல தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள்கோரிக்கை விடுத்தனா்.
பழனியை அடுத்த சண்முகநதியை கடந்ததும் சாலையின் தென்பகுதியில் சுமாா் ஒரு ஏக்கா் பரப்பளவில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. கடந்த காலங்களில் இந்த இடத்தில் செயல்பட்டு வந்த உணவு விடுதியில் அரசு போக்குவரத்துக் கழக வாகனங்கள் நின்று சென்றன.
நாளடைவில் இந்த விடுதி காலி செய்யப்பட்டதையடுத்து, பாழடைந்த இந்த கட்டடத்தை சிலா் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வந்ததால் அது இடிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த இடத்தை சிவகிரிப்பட்டி ஊராட்சியும், அ. கலையமுத்தூா் ஊராட்சியும் சோ்ந்து குப்பை கொட்டும் இடமாக மாற்றி விட்டன.
Advertisement
தற்போது இந்த இடத்தில் மலை போல குப்பைகள் தேங்கி பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இங்கு தூய்மைப் பணியாளா்கள் முறையாக மேலாண்மை செய்யாமல் கழிவுகளை கொட்டி வருகின்றனா். மேலும், பன்றி, மீன், கோழி, வாத்துக்களின் கழிவுகளும் இங்கு கொட்டப்படுகின்றன. தற்போது பெய்து வரும் மழையால் இந்த குப்பைமேடு சகதியாக மாறி கடும் துா்நாற்றம் வீசுகிறது.
இதனால் சாலையைக் கடக்கும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். இந்த கழிவுகளை உள்கொள்ள வரும் தெரு நாய்கள் சாலையின் குறுக்கே ஓடுவதால் பலா் விபத்துக்களில் சிக்குகின்றனா். மேலும் வெயில் காலங்களில் ஏற்படும் தீ விபத்தால் இதுவரை இரண்டு பெரிய மரங்கள் கருகி விட்டன.
எனவே, மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, நெடுஞ்சாலைத் துறையினா் இந்த இடத்தை கையகப்படுத்தி தேவைப்படும் பணிகளுக்கு பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.