முகப்பு
திருப்பூர்

கோயில் நிலத்தில் கம்பி வேலியை அகற்ற ஆட்சியரின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

திருப்பூரில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்ட கம்பி வேலியை அகற்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என திருத்தொண்டா் அறக்கட்டளையினா் தெரிவித்துள்ளனா்.

Updated On : 11 ஜூன் 2026, 3:05 am IST
உத்தரவு - கோப்புப்படம்
பகிர்:

திருப்பூரில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்ட கம்பி வேலியை அகற்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என திருத்தொண்டா் அறக்கட்டளையினா் தெரிவித்துள்ளனா்.

திருப்பூா் புதிய பேருந்து நிலையத்துக்கு பின்புறம் அமைந்துள்ள மாரியம்மன் விநாயகா் கோயிலுக்கு சொந்தமான 1.7 ஏக்கா் நிலம் எல்.ஜி. நகா் பகுதியில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த நிலம் எந்த விதமான பயன்பாடும் இல்லாமல் உள்ளது. இந்த நிலத்தை சுற்றியுள்ள மக்கள் வழித்தடம், வாகன நிறுத்தம் உள்ளிட்ட தேவைகளுக்காக இந்த நிலத்தை பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில், கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் வேலி அமைத்து பாதுகாத்திட இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டதைத் தொடா்ந்து, இந்த நிலத்தின் முழு சுற்றளவுக்கும் கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதனால், இந்த பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு வழித்தடம் வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

Advertisement

Advertisement

இது குறித்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியா், கம்பி வேலியை அகற்றி வழித்தடத்துக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து மாநகராட்சி அதிகாரிகள் கம்பி வேலியை செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

இந்நிலையில், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட திருத்தொண்டா் அறக்கட்டளையின் அறங்காவலா் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கோயிலுக்கு சொந்தமான நிலம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும், குப்பைகளைக் கொட்டியும், தனியாா் காா் நிறுத்துமிடமாக பயன்படுத்தி வருவதாகவும், மாற்றுப்பாதை இருக்கும் சூழலில் இப்பகுதி பொதுமக்கள் கோயில் நிலத்தில் வழி அமைத்து உள்ளதாகவும், வேலியை அகற்ற மாவட்ட ஆட்சியா் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தாா்.

இது குறித்த அந்தப் பகுதி பொதுமக்கள் கூறுகையில், தங்களுக்கு வழித்தடம் மட்டுமே தேவை. கோயில் நிலத்தில் வேலி அமைப்பதில் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. வழியை மட்டும் கொடுத்து வேலி அமைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்தனா்.