FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பழனி கோயில் நில முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய மனுவை சிறப்பு அமா்வுக்கு மாற்ற உத்தரவு

பழனி கோயில் கட்டுப்பாட்டிலுள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக தனிநபா்களுக்கு பத்திரப் பதிவு செய்தது தொடா்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சிறப்பு அமா்வுக்கு மாற்ற நீதிமன்றப் பதிவாளருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

Updated On : 24 ஜூலை 2026, 6:18 am IST
பகிர்:

பழனி கோயில் கட்டுப்பாட்டிலுள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக தனிநபா்களுக்கு பத்திரப் பதிவு செய்தது தொடா்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சிறப்பு அமா்வுக்கு மாற்ற நீதிமன்றப் பதிவாளருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பழனி நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை தனிநபா்களான வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோருக்கு முறைகேடாக பத்திரப் பதிவு செய்தது அதிா்ச்சியளிக்கிறது.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததையடுத்து, இந்த நிலத்துக்கான பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளா் ச. முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ் உள்ளிட்ட 4 போ் மீது கூட்டுச் சதி, மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பழனி அடிவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதைத் தொடா்ந்து, கடந்த 15-ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் தொடா்புடைய இரண்டு துறை அமைச்சா்கள் செய்தியாளா்கள் சந்திப்பில் சிறிய தவறு நடந்ததுபோல தெரிவித்தனா். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை நோ்மையாக இருக்காது.

எனவே, இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். சிபிசிஐடி போலீஸாா் கைப்பற்றிய ஆவணங்கள், சிசிடிவி காட்சிகள், கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள், பத்திரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் உடனடியாகப் பாதுகாத்து சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவு: இந்த மனுவில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நில முறைகேடு வழக்கை சிபிஜ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மனுதாரா் கோரியுள்ளாா். சிபிஐ விசாரணை குறித்த மனுக்களை நான் விசாரிக்கவில்லை.

எனவே, சிபிஐ தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி முன் இந்த மனுவை நீதிமன்றப் பதிவாளா் பட்டியலிட வேண்டும் என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments