சகோதரர் மீது வன்கொடுமை தடுப்புப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யக்கோரி பெண் மனு: இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சகோதரர் மீது வன்கொடுமை தடுப்புப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யக்கோரி பெண் மனு: இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சகோதரர் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யக்கோரிய வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த உமாதேவி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பெரியார் நகரில் உள்ள எனது பெற்றோரின் வீட்டில் முதல் மாடியில் வசித்து வருகிறேன். இந்நிலையில் 2014 இல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற என் தந்தை இறந்தார். தந்தையின் இறப்புக்குப் பின் என் தாயார் வீட்டின் கீழ் தளத்தில் குடியிருந்தேன். இந்நிலையில் வீட்டின் முதல் தளத்தை காலி செய்து தன்னிடம் ஒப்படைக்குமாறு எனது சகோதரர் என்னை மிரட்டினார். இதற்கு நான் மறுத்ததையடுத்து தொடர்ந்து பிரச்னையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி போலீஸாரிடம் புகார் செய்தேன். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், சாதாரண பிரிவுகளில் மட்டுமே வழக்குப்பதிவு செய்தனர். எனவே நீதிமன்றம் தலையிட்டு பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட உரிய சட்டப்பிரிவுகளை வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், மனுதாரர் கோரியுள்ளபடி பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகள் வழக்கில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கில் உரிய சட்டப்பிரிவுகளை சேர்த்து விசாரணையை தொடரவும், உரிய பிரிவுகளின் கீழ் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.