மதுரையில் கொசு மருந்து தெளிப்பு இல்லை: காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
மதுரை மாநகராட்சியில் கொசு மருந்து தெளிப்புப் பணிகள் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறாத
மதுரை மாநகராட்சியில் கொசு மருந்து தெளிப்புப் பணிகள் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறாத காரணத்தால் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் சுமார் 15 வார்டுப் பகுதிகளில் டெங்கு, நிமோனியா, பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. தண்ணீர் வழிந்தோடும் வாய்க்கால் சரியாக பராமரிக்கப்படாததால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு கொசு முட்டை அழிக்கும் அபேட் மருந்து வாங்கியதில் முறைகேடு புகாரைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சியின் நகர்நல அலுவலர் சதீஷ்ராகவன் நீண்ட விடுப்பில் சென்றுள்ளார். அவரது பணியிடம் இதுவரை நிரப்பவில்லை. மேலும் உதவி நகர்நல அலுவலர் பணியிடமும் பல மாதங்கள் காலியாக இருந்த நிலையில், கடந்த வாரமே பணியிடம் நிரப்பப்பட்டது.மதுரை மாநகராட்சியில் மழைக்காலங்களில் கொசு ஒழிப்புப் பணிக்கு பல லட்சம் செலவிடப்படுகிறது. ஆனால், கொசு ஒழிப்புக்கான முழுமையான நடவடிக்கை இல்லை. கொசு உற்பத்திக்கு தனியார் நிறுவனம், கடைகளைக் காரணம் காட்டி மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் பொது இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவதில் மாநகராட்சி அக்கறை காட்டுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மாநகராட்சியில் கொசு ஒழிப்பு வாகனம் மற்றும் கையினால் செயல்படுத்தும் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் சாதனங்களும் ஏராளமாக இருந்தும், அதை வார்டு வாரியாக தினமும் பயன்படுத்தி கொசு மருந்தை தெளிக்கவில்லை என்பதே மக்கள் கருத்தாகும்.
திட்டமிடல் இல்லை: கொசுப் பரவல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு குறித்து மதுரை மாநகராட்சி நகர்நலப் பிரிவிலும், மாவட்ட சுகாதார துணை இயக்குநர் அலுவலத்திலும் சரியான புள்ளி விவரங்கள் திரட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தினமும் காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வருவோர் தரும் முகவரியை வைத்தே, காய்ச்சல் பாதிப்பு பகுதிகளை கண்டறிந்து மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் மதுரை மாநகராட்சிப் பகுதியில் புதூர், சோலையழகுபுரம், திருப்பாலை, கோமதிபுரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வார்டுகளில் தினமும் 500 பேர் வரை காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஆனால், 150 பேர் மட்டுமே பாதிக்கப்படுவதாக நகர்நலப் பிரிவினர் கணக்கு காட்டி வருகின்றனர். இப்பகுதியில் காய்ச்சல் பாதிப்பை தடுக்கும் நடவடிக்கைகைள் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி நகர்நலப் பிரிவு, மாவட்ட சுகாதார துணை இயக்குநர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டை விட தற்போது காய்ச்சல் பாதிப்பு குறைந்திருப்பது தெரிகிறது. ஆனாலும், கொசு மருந்தை அனைத்து பகுதிகளிலும் தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.