முகப்பு
மதுரை

வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

மதுரையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் ஆய்வாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டனர்.

Updated On : 13 பிப்ரவரி 2019, 8:02 am IST
பகிர்:

மதுரையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் ஆய்வாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டனர்.
தமிழகத்தில் வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு குறிப்பிட்ட கல்வித்தகுதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் கல்வி நிறுவனத்தின் உதவியுடன் பலருக்கு கல்விச்சான்றிதழ் பெறப்பட்டு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டதாகவும், இதில் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், ஆய்வாளர்கள், ஊழியர்கள் உள்பட 17 பேர் மீது கடந்த ஜூன் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்குத்தொடர்பாக தற்போது சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பணிபுரியும் கல்யாண்குமார், மதுரை தெற்கு வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணலதா ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.
 இதில் மதுரை திருப்பாலை பகுதியில் சொகுசு குடியிருப்பு வளாகத்தில் உள்ள  கல்யாண்குமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை காலை சோதனை மேற்கொண்டனர். 
இதேபோல சர்வேயர் காலனி 120 அடி  சாலையில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணலதா வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஏறக்குறைய 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்குத்தொடர்பாக சென்னையில் சிறப்பு அனுமதி பெறப்பட்டு சோதனை நடத்தப்பட்டது என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.