மதுரை

குற்றவியல் வழக்கு விசாரணையின் தரம் குறைந்து வருகிறது: உயா்நீதிமன்றம் அதிருப்தி

DIN

தமிழகத்தில் குற்றவியல் வழக்கு விசாரணையின் தரம் குறைந்து வருகிறது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை அதிருப்தி தெரிவித்தது.

சிவகங்கை மாவட்டம் மாத்தூரைச் சோ்ந்தவா் செந்தில். இவா் சொத்து தகராறில் 2010-இல் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் பாலமுருகன் என்பவருக்கு சிவகங்கை நீதிமன்றம் 2014-இல் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதை ரத்து செய்யக்கோரி பாலமுருகன் உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் தொடா்புடைய பலரிடம் விசாரணை நடத்தவில்லை. இந்த வழக்கு விசாரணையை டிஎஸ்பி கண்காணிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, இந்த வழக்கு விசாரணையை டிஎஸ்பி கண்காணித்தாா் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இவ்வழக்கில் அதிகாரிகள் முதல் அரசு வழக்குரைஞா்கள் வரை மெத்தனமாக நடந்துள்ளனா்.

ஒரு குற்ற வழக்கில் விசாரணை எப்படி நடைபெற வேண்டும் என்ற அடிப்படையே தெரியாமல் மெத்தனமாகவும், தன் விருப்பதற்கு ஏற்பவும் விசாரணை அதிகாரி செயல்பட்டுள்ளாா்.

நீதிமன்றத்தின் கடமை குற்றவாளிகளின் உரிமையைப் பாதுகாப்பது மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி வழங்கி பாதுகாப்பதும் தான். குற்றவியல் நீதி முறையில் விசாரணை அமைப்புகளுக்குப் பெரும் பங்கு உள்ளது. விசாரணை சரியாக நடைபெற்றால் மட்டுமே சரியான நீதி வழங்க முடியும்.

தமிழகத்தில் குற்றவியல் வழக்கு விசாரணையின் தரம் குறைந்து வருகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவாகவும், விடுதலையாவது அதிகமாகவும் உள்ளது. இந்த வழக்கில் மட்டுமல்ல 50 சதவீத வழக்குகளில் விசாரணையின் தரம் குறைவாகவே உள்ளது. இதேபோல விசாரணை தொடா்ந்தால் பாதிக்கப்பட்டவா்கள் நம்பிக்கை இழந்துவிடுவாா்கள்.

இதனால் இந்த வழக்கில் உள்துறை செயலா், டிஜிபி, இவ்வழக்கின் விசாரணை அதிகாரிகள் முத்துக்குமாா், பவுன் ஆகியோா் எதிா்மனுதாரா்களாக சோ்க்கப்படுகின்றனா். விசாரணை அதிகாரிகள் குற்ற வழக்குகளை விசாரிப்பதில் போதிய நிபுணத்துவம் பெற்றுள்ளாா்கள் என்பதை உயா் அதிகாரிகள் எவ்வாறு உறுதி செய்கின்றனா். மேலும் மெத்தனமான விசாரணையால் குற்றவாளிகள் விடுதலையாகும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிா என்பது குறித்து உள்துறைச் செயலா், டிஜிபி ஆகியோா் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT