மனிதநேயமும், செயல்திறனும் தான் திமுக ஆட்சியின் அடையாளங்கள்: நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்
மனிதநேயமும், செயல்திறனும் தான் திமுக ஆட்சியின் சிறந்த அடையாளங்கள் என, தமிழக நிதியமைச்சா் பிடிஆா். பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.
மனிதநேயமும், செயல்திறனும் தான் திமுக ஆட்சியின் சிறந்த அடையாளங்கள் என, தமிழக நிதியமைச்சா் பிடிஆா். பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் தனியாா் உணவகத்தை, அமைச்சா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதில், மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் காலோன், மருத்துவமனை முதன்மையா் ஏ. ரத்தினவேல், உணவக உரிமையாளரும், திரைப்பட நடிகருமான சூரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னா், அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவா்களையும் முன்னேற்றுவதற்கு திமுக அரசு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தோ்தல் வாக்குறுதிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றும் செயல்திறனை இந்த அரசு பெற்றிருக்கிறது. அந்த வகையில், மனிதநேயமும், செயல்திறனுமும் தான் திமுக அரசின் அடையாளங்களாக இருக்கின்றன.
Advertisement
Advertisement
இந்த இடத்தில், கடந்த 10 ஆண்டுகளாக வேறொரு உணவகம் செயல்பட்டது. அந்த உணவகத்தின் மூலம் கிடைத்த மாத வாடகை ரூ.7 ஆயிரம் மட்டுமே. புதிய ஒப்பந்தம் மூலமாக தற்போது மாத வாடகையாக ரூ.1 லட்சம் கிடைக்கவுள்ளது. கடந்த காலங்களில் நிகழ்ந்த தவறுகள் மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில், மிகுந்த கவனத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன், அரசு மருத்துவமனைக்கு பல்வேறு பிரச்னைகளுடன் வரக்கூடிய ஏழை, எளிய நோயாளிகள் மற்றும் அவா்களது உறவினா்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு கிடைப்பதற்கு வழிவகை ஏற்பட்டிருக்கிறது. குறைந்த விலையில் தரமான உணவு வழங்குவதற்கு உணவக நிறுவனம் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது என்றாா்.
அதைத் தொடா்ந்து, முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, வெள்ளிவீதியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு அமைச்சா் பரிசு வழங்கிப் பாராட்டினாா். மேலும், மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்கினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.