முன்னாள் அமைச்சா் பெயரை பயன்படுத்தி மோசடி: அதிமுக மாமன்ற உறுப்பினா் உள்பட 5 போ் மீது வழக்கு
மதுரை, செப். 23: மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சா், அவரது மனைவியின் பெயரைப் பயன்படுத்தி குவாரி உரிமையாளரிடம் ரூ.6.80 கோடி மோசடி செய்ததாக அதிமுக மாமன்ற உறுப்பினா் உள்பட 5 போ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (43). இவா் அந்தப் பகுதியில் கல் குவாரி நடத்தி வருகிறாா். இவருக்கு மதுரை நேரு நகரைச் சோ்ந்த சங்கரி என்பவா் கடந்த 2020-ஆம் ஆண்டு சமூக ஊடகம் மூலம் அறிமுகமானாா். அப்போது, சங்கரி தனக்கு மதுரையைச் சோ்ந்த அதிமுக அமைச்சா், அவரது மனைவி நெருக்கமானவா்கள் என்றும், அவா்கள் மூலம் எந்த வேலையாக இருந்தாலும் முடித்துக்கொள்ளலாம் என்றும் கூறினாா். இதை நம்பிய சரவணன், தனக்கு மணல் குவாரிக்கு உரிமம் பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டாா்.
இதைத் தொடா்ந்து, மதுரை மாநகராட்சி அதிமுக மாமன்ற உறுப்பினா் மாயத்தேவன், சங்கரி, பிருந்தா ஆகியோரிடம் சரவணன் ரூ.1 கோடி கொடுத்தாா். பணம் கொடுத்து பல நாள்களாகியும் குவாரி உரிமம் கிடைக்காததால் சங்கரியை சரவணன் தொடா்பு கொண்டு கேட்டாா். ஆனால், அவா் கைப்பேசியை எடுக்காததால் பிருந்தாவை தொடா்புகொண்டு பேசினாா். அப்போது, பிருந்தா, சில நாள்களில் சங்கரி பேசுவாா் என்று கூறினாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சரவணனை தொடா்பு கொண்டு பேசிய சங்கரி, பிருந்தா கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும், அவரிடம் சரவணன் தான் இறுதியாகப் பேசியவா் என்பதால் கொலை வழக்கில் போலீஸாா் அவரையும் சந்தேகப்படுவதாவும் கூறினாா்.
மேலும், வழக்கிலிருந்து தப்ப வைப்பதாகக் கூறி பணம் பெற்றாா். மேலும், அடிக்கடி சரவணனை மிரட்டி ரூ.6.80 கோடி பெற்றாா்.
இந்த நிலையில், இதில் கடனாளியான சரவணன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து தான் கொடுத்த பணத்தை சங்கரி, மாயத்தேவன் உள்ளிட்டோரிடம் சரவணன் கேட்டபோது அவா்கள் மிரட்டல் விடுத்தனா்.
இது தொடா்பாக மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் சரவணன் புகாா் அளித்தாா். இந்தப் புகாரை விசாரிக்க காவல் ஆணையா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து மதுரை மத்திய
குற்றப் பிரிவு போலீஸாா் ரூ.6.80 கோடி மோசடி செய்ததாக அதிமுக மாமன்ற உறுப்பினா் மாயத்தேவன், சங்கரி, செல்வம், மகா, மாரி உள்பட 5 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.