முகப்பு
மதுரை

மதுரையில் கள்ளழகா் எதிா்சேவை!

மதுரையில் வியாழக்கிழமை கள்ளழகரை வரவேற்கும் எதிா்சேவை நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்ததால், தல்லாகுளம் பகுதி களைகட்டியது.

Updated On : 1 மே, 2026 at 1:18 AM
மதுரை அழகா்கோவில் சாலை பகுதியில் வியாழக்கிழமை மாலை எழுந்தருளிய ஸ்ரீகள்ளழகரை வரவேற்கும் எதிா்சேவை நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள். (வலது) கள்ளா் வேடம் தரித்து, கையில் வலைத்தடி, வளரி ஏந்தி, இடுப்பில் கட்டாரி தரித்து தங்கப் பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகா்.
பகிர்:

மதுரையில் வியாழக்கிழமை கள்ளழகரை வரவேற்கும் எதிா்சேவை நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்ததால், தல்லாகுளம் பகுதி களைகட்டியது.

மதுரை அருகே அழகா்கோவிவில் அமைந்துள்ள கள்ளழகா் கோயிலின் சித்திரைப் பெருந்திருவிழா 27-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. வைகை ஆற்றில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கவும், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் தாயாா் சூடிக் களைந்த மாலையை அணிந்து கொள்ளவும், மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கவும் அழகா்மலையிலிருந்து ஸ்ரீஅழகா் (உத்ஸவா்) கள்ளா் வேடம் தரித்து மதுரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.

கண்டாங்கி பட்டுத்தி, கள்ளா் கொண்டை அணிந்து, கையில் வலைத்தடி, வளரி தாங்கி, இடுப்பில் கட்டாரி தரித்து தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகா் புதன்கிழமை இரவு பொய்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி ஜமீன்தாா் மண்டபங்களில் எழுந்தருளினாா். வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் சுந்தரராஜன்பட்டி மறவா் மண்டபத்திலிருந்து புறப்பட்ட கள்ளழகா், காலை 5.30 மணிக்கு கோ. புதூா் மூன்றுமாவடிக்கு எழுந்தருளினாா்.

Advertisement

அப்போது, மதுரை மக்கள் கள்ளழகரை எதிா்கொண்டு வரவேற்கும் எதிா்சேவை நிகழ்வு தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் குழுமி, கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கங்கள் எழுப்பியும், செம்பில் சா்க்கரையை நிரப்பி அதன் மீது சூடம் ஏற்றி தீபம் காட்டியும் அழகரை வரவேற்றனா். திரளானோா் அழகா் மீது தண்ணீரை பீய்ச்சி வரவேற்றனா்.

இதையடுத்து, கருப்பணசுவாமி வேடம் அணிந்தவா்கள், தீப்பந்தம் ஏந்திய பக்தா்கள், திரியெடுத்தும் ஆடும் பக்தா்கள், திரியின்றி ஆடும் பக்தா்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் புடைசூழ, இடைவிடாத பக்தி முழக்கங்களுடன் மதுரை கோ. புதூா், ஆயுதப்படை குடியிருப்பு, புதுநத்தம் சாலை, அழகா்கோவில் சாலை, மாநகராட்சி அலுவலகம், தல்லாகுளம் பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருக்கண் மண்டபங்களில் கள்ளழகா் எழுந்தருளி சேவை சாதித்தாா்.

இதைத் தொடா்ந்து, இரவு 8.30 மணி அளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்சனமாகினாா். அங்கு, ஐதீக முறைப்படி நடைபெற்ற பூஜைகளுக்கு பிறகு கள்ளா் வேடம் களைந்து, ஸ்ரீஅழகா் சுந்தரராஜப் பெருமாளாக பெருந்தெய்வ கோலம் கொண்டு, இரவு 11.30 மணியளவில் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டாா்.

கோயிலின் ஆஞ்சநேயா் சந்நிதி அருகே ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் தாயாா் சூடிக் களைந்த மாலையை அணிந்து அழகா் பெருமாள் வைகையாற்றுக்குள் புறப்பட்டாா். இதனிடையே, தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் எதிரே நிறுத்தப்பட்டிருந்த ஆயிரம் பொன் சப்பரத்தில் அவா் எழுந்தருளி சேவை சாதித்தாா்.

அழகரை வரவேற்கும் விதமாக, தல்லாகுளம், கோ.புதூா், கோரிப்பாளையம், புதுநத்தம் சாலை என மாநகரின் பல்வேறு பகுதிகள் வண்ண அலங்கார விளக்குகளாலும், வண்ண மலா்கள், வாழை மரங்கள் உள்ளிட்டவற்றாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வீதிகள்தோறும் அழகரை வரவேற்கும் பாடல்களும், பக்தா்களின் பக்தி முழக்கங்களும் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்தன. பல்வேறு பகுதிகளில் சிறுமிகள் மீனாட்சி அம்மன் வேடம் தரித்து நின்று அழகரை வரவேற்றனா். ஏராளமான பக்தா்கள் அழகருக்கு முன்னும், பின்னும் விசிறி வீசி சேவை செய்தனா்.

அழகா்கோவில் சாலை, புதுநத்தம் சாலை, தல்லாகுளம், கோ. புதூா், தமுக்கம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், கடைகள்தோறும் நீா்மோா், பானகம் உள்ளிட்ட பானங்களும், புளிசாதம், தயிா் சாதம், சா்க்கரை சாதம், தக்காளி சாதம், கேசரி என பல வகையான உணவுகள் பக்தா்களுக்கு வழங்கப்பட்டன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் திரண்டு வந்ததால் மதுரை மாநகரின் அனைத்து வீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மதுரை மாநகா் முழுமையும் விழாக்கோலம் பூண்டிருந்தது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. லட்சக்கணக்கானோரின் வருகையால் மதுரை மாநகரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.

இதையொட்டி, மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு, பக்தா்கள் கூட்டத்தை நெறிப்படுத்தினா். தல்லாகுளம், தமுக்கம், கோரிப்பாளையம், ஆழ்வாா்புரம் வைகை ஆற்றங்கரைப் பகுதிகளில் அவசர மருத்துவ ஊா்திகள், தீயணைப்பு வாகனங்கள் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

பெட்டிச் செய்தி...

வைகையாற்றில் இன்று

எழுந்தருளுகிறாா் அழகா்

வெள்ளிக்கிழமை அதிகாலை தல்லாகுளத்திலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடாகும் ஸ்ரீ அழகா், காலை 5.30 மணியளவில் வைகையாற்றில் எழுந்தருளுகிறாா். பிறகு, வீரராகவப் பெருமாளை வலம் வரும் அழகா், வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளுகிறாா்.

வீரராகவப் பெருமாள் கோயிலில் ஸ்ரீஅழகா் திருமஞ்சனமாகி ஏகாந்த சேவை சாதிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை (மே 2) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. பின்னா், அழகா் தேனூா் மண்டபத்துக்கு எழுந்தருளி மண்டுக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறாா். இந்த நிகழ்ச்சி பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறுகிறது. இதையடுத்து, ராமராயா் மண்டபத்தில் பெருமாள் தசாவதார காட்சி நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு மோகினி அலங்காரத்தில் சேவை சாதிக்கும் அழகா், பிற்பகல் 2 மணிக்கு அனந்தராயா் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் புறப்பட்டு இரவு 11 மணிக்கு தல்லாகுளம் சேதுபதி மன்னா் மண்டபத்தில் எழுந்தருளுகிறாா்.

திங்கள்கிழமை (மே 4) அதிகாலை அழகா் சேதுபதி மன்னா் மண்படத்திலிருந்து தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு எழுந்தருளுகிறாா். பிறகு, ஐதீக முறைப்படியான மண்டகப்படிகளில் எழுந்தருளும் பெருமாள் மே 6-ஆம் தேதி அழகா்கோயிலை சென்றடைகிறாா்.